திங்கள், 4 பிப்ரவரி, 2013

பேரழிவில் : கடலூர் மாவட்டம் - நடு நாடு

சிறப்பு :


இப்போது இருக்கும் நம் தமிழ்நாடு பழங்காலத்தில் எத்தனை நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என ஒரு கேள்வி கேட்டால், நமது பதில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு, தொண்டை நாடு என வரிசையாக சொல்லுவோம். ஆனால், இந்த வரிசையில் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தெரியாத ஒரு நாடு, சோழரும் பல்லவரும் பற்ப்பல வெற்றிகளை குவித்து வரலாறு படைக்க உறுதுணையாகவும் காரணியாகவும் வீரத்தின் ஆணி வேராகவும் இருந்த நாடு. பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என அனைவரும் போட்டி போட்டு அடைய நினைத்த வற்றாத வளம் கொண்ட நாடு. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் இன்றளவும் போற்றி வளர்த்துவரும் நாடு. தமிழனின் முதல் கலையாம் “தெருக்கூத்தை” இன்றும் நடத்தி வரும் நாடு. ஒவ்வொரு ஆடி மாதமும் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும்போது இத்திருநாட்டின் எந்த கிராமத்திற்க்கு சென்றாலும் நீங்கள் தெருக்கூத்தை காண இயலும்.

பார்ப்போர் மனதை பறிக்கச் செய்யும் எழிலும் வளமும் கொண்ட நாடு. சமதளத்தில் ஊற்றெடுக்கும் வளம் கொண்ட ஒரே நாடு. கற்பனை பாத்திரமல்லாத உண்மை வள்ளல்களுள் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வள்ளற் கொடையோன் காரி ஆண்ட நாடு. ஐவகை நிலங்களில் பாலை நிலத்தை தவிர்த்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலங்களையும் கொண்ட நாடு. எங்கள் நாடு “நடு நாடு”. இன்றைய பொதுத்தமிழில் உள்ள, கிட்டதட்ட எல்லா வார்த்தைகளுமே எங்கள் நடு நாட்டு தமிழோடு பொருந்திப்போகும். ஒரு உதாரணம் தேங்காயின் மேலோட்டினை பொதுத்தமிழில் “கொட்டான் குச்சி” என்று அழைப்பர். எங்கள் நடு நாட்டுத் தமிழில் அதற்க்குப் பெயர் “கொட்டாஞ்சி”.

நம் தமிழ்நாட்டில், வடக்கில் தென்பெண்ணை ஆற்றையும், தெற்கில் வெள்ளாற்றையும், கிழக்கில் வங்க கடலையும், மேற்கில் கல்வராயன் மலைத்தொடரையும் எல்லைகளாக கொண்ட பகுதி “நடு நாடு” ஆகும்.



தற்போதைய வரைபடத்தில் கடலூர் மாவட்டம் முழுமையும் மற்றும் விழுப்புரம் மாவட்ட்த்தின் சில பகுதிகள் நடுநாட்டின் எல்லைகளுக்குள் அடங்கும்.

பேரிடர்கள்: 

எல்லோருக்கும் பிடித்தமான எங்கள் நடு நாட்டினை இயற்கைக்கும் ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது தன் பணியாட்களை ஏவி எங்கள் வளங்களில் தனக்கும் பங்கு வேண்டும் என எங்கள் விருப்பத்தை கேட்காமலே தான் விரும்பிய அனைத்தையும் எடுத்துச்சென்றுவிடும்.

இப்பதிவில், இதுவரை நடு நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை, நான் படித்து தெரிந்துகொண்டவைகளையும் என் நேரடி அனுபவங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்.

இயற்கையின் ஏவலினால் எங்கள் நடு நாட்டிற்க்கு அடிக்கடி வந்து செல்பவை காற்றின் துணை கொண்டு ஆகாய மார்கமாக புயலும், நீரின் துணைகொண்டு தரை வழியாக வெள்ளமும் தான். எத்தனை முறை எங்கள் வளங்கள் இயற்கையால் கொள்ளையடிக்கப்பட்டாலும் கலங்கியதில்லை கடலூர் மாவட்டம்(நடு நாடு). இயற்கை எங்களை எத்தனை முறை தாக்கியிருக்கிறது எனத்தெறிந்தாலே எங்களின் மீள் எழுச்சி உங்களுக்கு புரியும். இதோ நான் தெரிந்துகொண்டவைகள் உங்களுக்காக.

1681ம் ஆண்டு புயலின் கோரத்தாண்டவம் எங்கள் நடு நாட்டில் நர்த்தனமாடியிருக்கிறது. அடுத்த 65 ஆண்டுகளுக்கு ஏதும் செய்யாத இயற்கை உங்களுக்கு ஓய்வு அதிகமாக கொடுத்துவிட்டேன் என “NOV 1745”ல் மீண்டும் புயலாய் வந்து சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கைகொட்டி சிரித்திருக்கிறது. என் நடு நாட்டு மக்கள் இயற்கையை முறைத்துப் பார்த்திருப்பார்கள் போலும், அடுத்த “APRIL 1749”லும் “OCTOBER 1752” லும் வந்து சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் துடைத்து வாரி சென்றிருக்கிறது.

அனைத்தையும் துடைத்து எடுத்து சென்றதாலேயோ என்னவோ அடுத்த 100 ஆண்டுகளுக்கு பெரிதாக எந்த தாக்குதலும் நடந்ததற்க்கான தகவல்கள் இல்லை. மீண்டும், சற்று செல்வ செழிப்போடு வளம்பெற்றுவிட்டார்கள் என்றறிந்த இயற்கை “DECEMBER 1853”ல் அழையா விருந்தாளியாக வந்து எங்களை சுருட்டி வாரி சென்றிருக்கிறது. அடுத்து சிறிதளவு ஓய்வு கொடுத்து 20 வருட இடைவெளியில் 1874 ம் ஆண்டில் சூறாவளி காற்றினால் சுழட்டி அடிக்கப்பட்டுள்ளது எங்கள் நடு நாடு. இதனிடையே 1864ம் ஆண்டு கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட வெள்ள பெருக்கு. கரையோர கிராமங்களை கரைத்தே எடுத்திருக்கிறது. அடுத்தடுத்து 1884லிலும் 1898லும் பல பகுதிகளை கெடிலம் துணைகொண்டு வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறாள் இயற்கை.

1902 ல் ஒரு புதிய பிரச்சனை, கடலூர் செம்மண்டலம் அருகே தென்பெண்ணையாற்றில் உடைப்பு ஏற்பட்டு நீர் நகருக்குள் புகுந்துள்ளது அதே சமயம் கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு. இதனால் கடலூர் நகரம் மார்பளவு நீரில், வெள்ளக்காட்டில் மூழ்கி தத்தளித்திருந்திருக்கிறது. 1913ல் மீண்டும் வெள்ளப்பெருக்கு. தண்ணீரில் தவித்திருக்கிறது நடு நாடு. கடலூர் நகருக்கு எப்போதும் போல இப்போதும் பெருத்த சேதம்.

அடுத்த 40 ஆண்டு காலம் சீரோடும் சிறப்போடும் செழிப்போடும் இயற்கையின் தொந்தரவு இல்லாமல் அமைதியாகவும் இனிமையாகவும் நகர்ந்துள்ளது. அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது. 1916ம் ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத ஒரு பெரும் புயல். இதுவரை எங்கள் வளங்கள் மீது மட்டுமே அதிக ஆசை கொண்டு அழித்தொழித்த இயற்கை, இம்முறை ஏதுமறியா எம்மக்கள் மீது அதீத ஆசை கொண்டு ஆயிரகணக்கானோரை அழைத்துச்சென்று/அடித்துச்சென்று வெற்றுடலை விரவி கிடத்தியது.

1913லும் 1924லும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. செய்வதறியாது தவித்த மக்களை சீர்குலைத்திருக்கிறது இயற்கை. தொடர்ச்சியாக புயலை மட்டுமே அனுப்பினால் மக்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதாலேயே புயலையும் மழையையும் மாறி மாறி அனுப்பியிருக்கிறாள் இயற்கை அன்னை.

1930ல் மீண்டும் புயல். இம்முறை புயலுடன் பெரு மழையை துணைக்கு அனுப்பியிருந்தாள் இயற்க்கை அன்னை. தொடர்ச்சியாக 36 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. மனித நடமாட்டமே முற்றிலும் முடங்கியது. கடலூர் மாநகரம் வீராணம் ஏரி போல் விசாலமாக காட்சியளித்தது மழையில் தாக்குதலால்.

1931ல் மீண்டும் வெள்ளம். கட்டற்று கரை புரண்டு ஓடியிருக்கிறது.

1933ம் ஆண்டு. இம்முறை இயற்கை அன்னை வேறொன்றை பரிச்சித்து பார்த்திருக்கிறாள். புயலை அனுப்பி கடல் அலைகளை 6 அடி உயரம் வரை மேலெழுப்பி அதை நகரினுல் அனுப்பி சேத விவரம் கணக்கிட்டுள்ளாள். 2004ம் ஆண்டின் ஆழிப் பேரலைக்கு வெள்ளோட்டம் பார்த்திருப்பாள் போலும்.

1937 மற்றும் 1939 ல் மீண்டும் வெள்ளத்தால் மாபெரும் பாதிப்பை சந்தித்தது நடு நாடு. இம்முறையும் கடலூர் நகரம் பெரிதாய் பாதிக்கப்பட்டது.

1941, 1943ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் புயல் தனது கோரத்தாண்டவத்தை நடு நாட்டில் ஆடியது.

அடுத்தடுத்த தாக்குதல்களை மழைகொண்டு மட்டுமே தாக்க எண்ணிய இயற்கை அன்னை 1946, 1955, 1963, 1966 ஆகிய ஆண்டுகளில் மழையால் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தினாள். இவ்வெள்ளப்பெருக்கின் போது கடலூர் நகரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இதுவரை நாம் கண்டது நம்மில் முக்கால்வாசி பேர் பிறப்பதற்க்கு முன்னர் நடு நாட்டில் நடந்த இயற்கை பேரிடர்கள். இனி நம் கண்முன்னே நடந்த சிலவற்றை பார்ப்போம்.

“சுனாமி” – ஆழிப்பேரலை :
26-12-2004. 2004ம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்த ஒரு பேரழிவு. “சுனாமி” என வெளி நாட்டினரால் பெயர் வைக்கப்பட்ட ஆழிப்பேரலையின் கொடூர தாக்குதல். அதுவரை எவரும் எதிர்பார்த்திராத, புயல், வெள்ளத்தின் போது எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் எம் நடு நாட்டு கடற்கரையோர மக்கள் மீது, இப்போது என்ன செய்வீர்கள் என்ற ஏளன பார்வையுடன் இறுமாப்புடன் இயற்கையால் தொடுக்கப்பட்ட வன்மமான தாக்குதல். 1933ம் ஆண்டு வெள்ளோட்டம் பார்த்ததை வெற்றிகரமாக நடத்திகாட்டினாள் இயற்கை அன்னை.

 


அன்று ஞாயிற்று கிழமை, வழக்கம்போல அதிகாலை 11 மணிவரை உறங்கிவிட்டு வெளியே வந்தேன். சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த எனக்கு பகீரென்று ஆனது. இயற்கை அன்னை கடல் கொண்டு தாண்டவம் ஆடுவதை காட்டிக்கொண்டிருந்தனர்.கடலூரைப் பற்றிய ஒளிப்படங்கள் ஏதும் இல்லை.

புரளி மட்டும் காட்டுத்தீயைவிட வேகமாக பரவிக்கொண்டிருந்த்து. கடல் நீர் குள்ளஞ்சாவடியைத்(ஊர்) தாண்டி வந்து கொண்டிருக்கிறதென்றும், பேருந்துகள் குள்ளஞ்சாவடிக்கு மேல் போகவில்லை என்றும் வெகு வேகமாய் பரவியது புரளி.

எங்க அப்பா தியாகவல்லியில்(ஊர்) இருக்கும் எங்கள் அத்தை வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை தொலைபேசி அழிப்பின் மூலமாக உறுதி செய்துகொண்டிருந்தார். தியாகவல்லி கடல் அருகில் இருக்கும் நெய்தல் நில கிராமங்களில் ஒன்று.

எங்க அப்பா பேரலைத் தாக்குதல் நடந்த மூன்றாம் நாள் எங்கள் பெரியார் கலைக் கல்லூரி இருக்கும் தேவனாம்பட்டினம் பகுதிக்கு சென்று வந்தார். இரண்டு மூன்று சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாக வந்து சொன்னார். அப்போது நான் அக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். பேரலையால் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியும் வரை எங்கள் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருந்தனர்.



ஆறாவது நாள் நானும், என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை பார்த்துவர சென்றிருந்தோம். கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தேவனாம்பட்டினத்திற்க்கு தனியார், அரசு பேருந்துகள் அனைத்தும் இலவச சேவையை மேற்க்கொண்டிருந்தன. எங்கள் கல்லூரியின் சுற்றுசுவர் முற்றிலுமாக தரைமட்டமாகியிருந்தது. கல்லூரியில் 5.5 அடி தண்ணீர் நின்றிருந்த்தற்க்கான சுவடுக்கள் சுவற்றில் தெரிந்தன. எங்கள் கல்லூரியின் சிற்றுண்டிசாலையின் மாடியில் ஒரு படகு கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதை அப்புறபடுத்தியிருந்தனர். எங்கள் கல்லூரியில் பேரலை நீர்தேக்க அளவு குறிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை காணலாம்.
என் நண்பன் கிருஷ்ணமூர்த்தி தேவனாம்பட்டினத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். அந்த வீட்டு உடைமையாளர் மனைவியும் இப்பேரலையால் இறந்துவிட்டார் என்ற செய்தி மேலும் சோகத்தை அதிகரித்தது.



அப்போது தான் எங்க வெள்ளி கடற்கரையில(Silver Beach) புதுசு புதுசா நிழற்குடை-லாம் கட்ட ஆரம்பிச்சியிருந்தாங்க. 15 அடி உயரம் எழுப்பியிருந்த நிழற்குடை கட்டிடம் மண்ணோடு மண்ணாக கலந்து தரையோடு தரையாக இருந்தது. கடற்கரை நெடுக இருந்த இருக்கைகள் ஒன்றையும் காணவில்லை. கடலோர காவல்படை கட்டிடம் தரைமட்டமாயிருந்தது.

இயற்கையின் இக்கொடூர தாக்குதலால் ஆயிரக்கனக்கானோர் உயிரிழந்து, வீடிழந்து, பொருளிழந்து நின்றது மட்டுமே மிச்சம். ஏனோ இயற்கையின் கோர முகம் எங்களை விட்டு எப்போதும் நீங்குவதாக இல்லை.

மழை :
அடுத்தகட்ட தாக்குதல் மழை உருவில், நவீன யுகத்திலும் என்னை மிஞ்ச எவனும் இல்லை என 2005, 2006ம் ஆண்டுகளில் கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது மழை. நடுநாடு முழுக்க வெள்ள மயம். கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் மழையின் பாதிப்பு வெகுவாக இருந்தது.
எங்க ஊருல முட்டிகால் உயரம் தண்ணீர் நின்னா சிதம்பரம் கோயில் கோபுரம் மூழ்கிவிடும் அப்படினு சொல்லுவாங்க. இந்த மழையால சிதம்பரம் முழுக்க ஏரி போலவே காட்சி அளித்தது.

தானே புயல் :
30-12-2011. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் புயல். சும்மா சுழட்டி சுழட்டி அடிச்சதுல ஊரையே சலவைக்குப் போட்ட மாதிரி சுத்தமா இருந்துச்சி. இந்த புயல் சமயத்துல நான் சென்னைல இருந்தேன். புயல் விட்டதுக்கு அப்புறம் ஊருக்கு வந்து பாத்தா.. மொத்த ஊரும் பளிச்சுனு இருக்கு. கொல்லைல இருக்குற ஒரு மரம் செடி கூட முழுசா இல்ல. முந்திரி மொத்தமும் திருவிகிட்டு கெடக்கு. மாமரம், பலா மரமெல்லாம் மொட்டை மொட்டையா நிக்குது. ஓட்டு வீடு, கூரை வீடெல்லாம் பாதிக்கு மேல காணாம போயிடிச்சு. ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் மொத்தமா அடியோட பாதிக்கப்பட்டுடிச்சு. சீரோடும் சிறப்போடும் சீர்மோவும் பட்டோடும் ஓரளவிற்க்கு செல்வ செழிப்போடும் இருந்த எம் மக்களை தானாகவே வந்து தகர்த்தெரிந்து போய்விட்டாள். புயலுக்கும் பெயரை “தானே” என சூடிவிட்டனர்.



குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள் திரு. வீணங்கேணி வி.சண்முகம் அவர்களால் எழுதி அறிவன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “நெய்வேலி மண்ணும் மக்களும்” எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. மேலும் இப்பதிவில் ஒரு வரி கூட அந்நூலில் இருப்பதை போல இருக்காது. தகவல்கள் மட்டுமே பெறப்பட்டவை.

நன்றி : கூகிள்[படம்]

வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஔவை ஆத்திச்சூடி - யாரேனும் விளக்கம் தர இயலுமா..?

ஆத்திச்சூடி, நான் நாலாவது படிக்கும்போது படிச்சது. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க மாமா பசங்க தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதுல நவீன ஆத்திச்சூடிதான் இருந்துச்சு. எனக்கு நாம படிச்ச ஔவையார் எழுதிய ஆத்திச்சூடிதான் ஞாபகம் வந்துச்சு. மனசுகுள்ளையே சொல்லி பாத்தேன். ஔ வரைக்கும் சொல்லிட்டன். ஃ-க்கு என்ன வரும்னு தெரியல. எவ்வளவோ யோசிச்சு பாத்தேன். கடைசி வரைகும் ஞாபகம் வரல. அப்புறமா தேடிபுடிச்சு தெரிஞ்சிகிட்டேன்.

ஆனால், இப்ப ஒரு சிக்கல். எல்லா வரிகளுக்கும் எனக்கு விளக்கம் தெரியல. 1000 வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டாலும் இப்போதும் படித்தவுடன் புரிந்துகொள்ள எளிமையானதும் தெளிவானதுமான மொழி தமிழ் என அயல்நாட்டினர் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால் தற்க்கால தலைமுறை தமிழனான எனக்கு மிக எளிமையான பாடலான ஆத்திச்சூடிக்குகூட சரியான விளக்கம் தெரியவில்லை.

நான் மட்டும் அல்ல, என்னைப் போல் மேலும் என்னை விட மோசமாக பல பேர் இருக்கின்றார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விடயம்.

சரி, நாம நம்ம கதைக்கு வருவோம்.. இங்க எனக்கு தெரிஞ்ச மாதிரியான விளக்கத்தை இங்க எழுதறன். விளக்கம் தெரியாத வரிகளுக்கு சிவப்பு மை இடுகிறேன். நான் சொல்லியிருக்குற விளக்கம் சரினா ஒன்னும் சொல்ல வேணாம். தப்புனா தப்ப சொல்லி விளக்கம் கொடுங்க. எனக்கு விளக்கம் தெரியாத வரிகளுக்கும் விளக்கம் கொடுங்க.

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்ப்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
                                             - ஔவையார்

அறம் செய்ய விரும்பு - நல்லவற்றை செய்ய ஆசைகொள்
ஆறுவது சினம் - குறைத்துக்கொள்ள வேண்டியது கோபம்
இயல்வது கரவேல் -
ஈவது விலக்கேல் - கொடைத்தன்மையை விட்டுவிடக்கூடாது
உடையது விளம்பேல் -
ஊக்கமது கைவிடேல் -
எண் எழுத்து இகழேல் - 
ஏற்ப்பது இகழ்ச்சி - பிச்சை பெருவது இழி செயல்
ஐயம் இட்டு உண் - 
ஒப்புரவு ஒழுகு - நற்பண்புடன் நடந்துகொள்
ஓதுவது ஒழியேல் - படிப்பதை நிறுத்திவிடக்கூடாது
ஔவியம் பேசேல் - 
அஃகம் சுருக்கேல் -

நான் இங்க சொல்லியிருக்குற விளக்கம் அனைத்தும் சரியா  என தெரியவில்லை. செய்யுளில் எழுத்துப்பிழை ஏதேனும் செய்திருந்தால் தமிழ்ப்பெரியோர் பொருத்தருளி என் தவறுகளை சுட்டிகாட்டவும்.

நன்றி : கூகிள்[படம்]

வியாழன், 17 ஜனவரி, 2013

நாசமாய்போகட்டும் தமிழ்நாடு அரசு..!!


பின்ன என்னங்க எதுவும் ஒரு அளவுக்குதான். ஒவ்வொரு வருசமும் புதுசு புதுசா சாராயக் கடையை அதிகரிச்சிகிட்டே போனா என்ன அர்த்தம். அதிகாரம் கைல இருந்தா என்ன வேணும்னாலும் செய்யலாமா..!!?

மொதல்ல என்னடானா ஒரே ஒரு சாராயக்கடைதான் இருந்துச்சு இந்திரா நகர்ல(நெய்வேலி). அதுவும் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில. இந்த நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையா வேற அறிவிச்சிருக்காங்க. அடுத்து கொஞ்ச வருசத்துல குடிகார மூதேவிங்க எண்ணிக்கை அதிகமாகி வருமானம் அதிகரிச்சதால பக்கத்துலயே இன்னொரு சாராயக்கடையை தொடங்கி இந்த வெளங்காவெட்டிகள ஊக்குவிச்சாங்க. இந்த மூதேவிகளும் குடிச்சே நாசமாபோறாங்க.

இந்திரா நகர பாத்தீங்கனா நல்லா வளர்ந்த நகர்(Town) புறம் மாதிரி இருக்கும். ஆனா, இந்த நாசமா போற அரசாங்கம் இப்ப என்ன பண்ணியிருக்குனா மூனாவதா ஒரு சாராயக்கடையை ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கடை இந்திரா நகர்ல இல்ல வடகுத்துல. இதுவும் அதே நெடுஞ்சாலை ஓரமாதான் இருக்கு. இந்த கடையோட பெயர் பலகைல பதிவு எண் எழுதப்படவில்லை. வாங்கும் சாராயத்திற்க்கு உரிய இரசீதும் கொடுக்கமாட்டாங்கலாம். இந்த கடையை ஆரம்பிச்சு கிட்ட தட்ட எட்டு மாசம் ஆகுதாம். மதுக்கூடம்(Bar) ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுதாம். இந்த எட்டு மாசமா பதிவு எண் இல்ல, இரசீதும் இல்ல.

வடகுத்து சுத்தமான கிராமம். இங்க சாரயக்கடை தேவையா..!!? ஒருவேளை குடிகாரர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டமா..!!?. போறபோக்க பாத்தா “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”னு சொன்ன பழமொழிக்கு இணையா “சாரயக்கடை இல்லாத ஊருடன் சகவாசம் வேண்டாம்”னு தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போலிருக்கு.

சமீபத்துல தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து சாராயக்கடைகளும் மூடப்படும்னு. ஒருவேளை தேசிய நெடுஞ்சாலையைத் தவிர மத்த நெடுஞ்சாலைகளில் அடிபட்டு செத்தா தப்பு இல்லனு நெனச்சிருப்பாங்க போலிருக்கு.

சரி அத விடுங்க, அறிவிப்பு வரவேற்க்க கூடியதுதான். ஆனால், எங்க பகுதியில இருக்குற இந்த சாராயக்கடைகளை கண்டிப்பா மூட மாட்டாங்க. ஒருவேளை அடிக்கடி போராட்டம் பன்னி தொந்தரவு கொடுத்துகிட்டே இருந்தா, கடையை வேற இடத்துக்கு மாத்துவாங்களே தவிர சுத்தமா மூடமாட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க வீணாபோறதுல அவ்ளோ சந்தோசம்.

குடியை வளர்க்கும் தமிழ்நாடு அரசு நாசமாய் போகட்டும்

நன்றி : கூகிள் [படம்]

வெள்ளி, 11 ஜனவரி, 2013

தமிழர் திருநாளாம் பொங்கல் : ஒரு சிறப்பு பார்வை


பொங்கல்னு சொன்னாலே கொண்டாட்டம்தாங்க.. தை(சுறவம்) மாசத்தோட முதல் மூனு நாளும் அப்டி ஒரு கொண்டாட்டமா இருக்கும்.  ஒவ்வொரு பகுதியிலேயும் இப்பண்டிகையை கொண்டாடுவதில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கலாம். இந்த பதிவுல எங்க வீடுகள்ல இந்த பண்டிகையை எப்படி சிறப்பா கொண்டாடுவோம்னுதான் இங்க சொல்லப்போறன்.

பொங்கல் பண்டிகைனா மார்கழி மாசமே கலைகட்ட ஆரம்பிச்சிடும். ஒரு சில சேதிகள் கூரைவீட்லயும், கிராமத்திலேயும் இருக்கிறவங்களுக்குதான் தெரியும்.

அதாவது, ஒவ்வொரு வருசமும் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதான் பல விசயங்கள் நடக்கும். வீட்டிற்க்கு வெள்ளை அடிப்பாங்க, வீட்டுல இருக்குற எல்லா வெங்கல, பித்தளை பாத்திரங்களையும் எடுத்து கழுவி வைப்பாங்க.
 

முக்கியமா மண்செவுரால(மண்சுவர்) ஆன வீடுகளை புதுப்பிப்பாங்க.
எப்டினா, வீடு முழுக்க(தரையில)  பூசுற அளவுக்கு செம்மண்ண வெட்டிவந்து ஒரு இடத்துல கொட்டி தண்ணீர் கலந்து நல்லா மிதிச்சு ஒரு குறிப்பிட்ட பக்குவத்திற்க்கு கொண்டு வந்து அரைக்கோள வடிவத்துல அமச்சி, அதோட உச்சியில ஒரு அரை அல்லது ஒரு படி(1 lt) தண்ணீர் புடிக்குற அளவுக்கு குழிய வச்சு பூசி ஒரு மூனு, நாலு நாளைக்கு ஊற வைப்பாங்க.

மண்தரை வீடுகள் எப்போதுமே மாட்டு சானத்தால் பூசி மொழுவியிருப்பாங்க. ஊறவச்ச புது மண்ணை போடறதுக்கு முன்னாடி, வீட்டு தரையை மேலோட்டமா செத்தி எடுப்பாங்க.எங்க வீட்டுல "புல் செத்தி" இருக்கும், அத வச்சிதான் நான் தரயை செத்துவேன். தரையை மேலோட்டமா செத்தி எடுத்துட்டு சுத்தமா பெருக்கி தண்ணி தெளிப்பாங்க. தண்ணி தெளிச்சிட்டு ஊற வச்சிருக்குற மண்ணை வெட்டி வந்து தண்ணி தெளிச்சிருக்குற இடத்துல கையால அழுத்தி பூசுவாங்க.

இத்தோட வேலை முடிஞ்சிடாது, இதுக்கு அப்புறம்தான் முக்கியமான வேலையே இருக்கு. மண்ணு போட்டதுக்கு அப்புறம் தரை பாதியளவு காயும் வரை காத்திருக்க வேண்டும். பாதி காஞ்சதுக்கு அப்புறம் ஒரு கூழாங்கல்ல(bubbles) எடுத்து தரையை தீத்தனும். அப்படி செஞ்சாதான் தரையில வெடிப்பு வராது. இப்படிதாங்க புது தரை போடுவாங்க.

எங்க ஊருல பொங்கலுக்கு எல்லா வீட்டுலயும் கண்டிப்பா வண்ண பூச்சு நடக்கும். புத்தாண்டுக்கு எல்லாத்தையும் புதுசா ஆரம்பிக்கனும்னு சொல்லுவாங்கல்ல, அதுமாதிரி தை 1 லேர்ந்து எல்லாமே புதுசுதாங்க. அதாவது, பழைய பொருட்கள் எல்லாத்துக்குமே புத்துயிர் குடுப்பாங்க. [எனக்கென்னமோ ஆதிகாலத்துல தை 1 தான் புத்தாண்டா கொண்டாடியிருப்பாங்கலோனு சந்தேகம் வருது]

சரி இனி நாம நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் சிறப்பு நாட்களாக இருக்கின்றன. அவை போகி, பெரும்பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள்.

போகி :
 
தை மாதம் பிறப்பதற்க்கு முந்தைய இறுதி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையன்று என்ன செய்வாங்கனு கேக்கறவங்களுக்கு இந்த வரிதான் பெரும்பாலானவர்களிடமிருந்து பதிலாக வரும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"

போகி அன்னைக்கு காலங்காத்தால முதல் கோழி(சேவல்) கூவும்போது எந்திரிச்சி கொல்லிக்கு(கொல்லை, வயல்,..) போய்ட்டு "போகியோ கொத்து" போட்டுட்டு வருவோம். போகியோ கொத்துனா ஒன்னுமில்லீங்க வேப்பிலை கொத்து. கொல்லையோட எல்லா மூலையிலயும் ஒரு கொத்த போடனும்.
மொதல்ல சனி மூலையிலதான் போடனும், அப்புறமா மத்த மூலைகளில் போட்டுட்டு வருவோம்.

நாம இந்த குளிருல கொல்லிக்கு போய்ட்டு போகியோ கொத்து போட்டுட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா, ஒவ்வொரு வீட்டுலையும் நெருப்பு மூட்டி குளிர் காஞ்சிகிட்டு இருப்பாங்க. நாமலும் நம்ம வீட்டுக்கு வந்து கூட்டத்தோட ஐக்கியமாகிடுவோம். அப்புறம் என்ன குளிர் உடம்ப விட்டு முழுசா போயி, சூரிய வெளிச்சம் மூஞ்சில சுரீர்னு அடிக்கிற வரைக்கும் எதையாவது போட்டு எரிய வச்சிகிட்டே இருப்போம்.
அப்புறம், சாயங்காலமா அம்மன் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வருவோம். இது நம்ம விருப்பம்தான்.
அவ்ளோதாங்க, எனக்கு தெரிஞ்ச போகி முடிஞ்சிடிச்சு.

பெரும் பொங்கல் :
தை 1 - பொங்கல் : காலைல எழுத்திரிக்கறதுலேர்ந்து நேரம் ரொம்ப சுறுசுறுப்பா போகும். தை 1ம் தேதிய நாங்க பெரும் பொங்கல்னுதான் சொல்லுவோம். பொதுவா எல்லா குடும்பங்களிலும் பெரும்பொங்கலன்னைக்கு வாச பொங்கல் வக்க மாட்டாங்க. ஒரு சில வம்சத்தினர்தான் வாசல்ல பொங்கல் வைப்பாங்க. அப்படி பெரும்பொங்கலன்னைக்கு வாசலில் பொங்கல் வைப்பவர்களை "பெரும்பொங்ககாரங்க"னு சொல்லுவாங்க. அந்த வகையில நாங்க பெரும்பொங்ககாரங்க. இதுல பெருமைபடுவதற்க்கு ஒன்னுமில்ல, ஏன்னா இது அவங்கவங்க வம்ச வழக்கப்படி நடக்குற சாதாரண நிகழ்வு.

ஏனையோர் பெரும்பொங்கலன்னைக்கு அவர்களின் குல தெய்வ கோயிலுக்கு ஒட்டுமொத்த குடும்பமாக பங்காளிகளுடன் சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வருவர்.

சரி, இனி பொங்கல் வைக்கறதுக்கு முன்னாடி என்னென்னசெய்வோம்னு சொல்றன். காலைலேயே குளிச்சு முடிச்சு புத்தாடை போட்டுகிட்டு கொண்டாட்டம் ஆரம்பமாகிடும். வாசலில் தோண்ட போற அடுப்புக்கு மேற்கு அல்லது தெற்கு பக்கமா சின்னதா சதுர வடிவுல ஒரு மேடை அமைப்போம். மேடை-னா பெருசா எதுவும் நெனச்சிடாதீங்க, தரையிலேயே ஒரு ரெண்டு, மூனு செ.மீ உயரத்துல மண்ணால ஒரு மேடை. இந்த மேடை கிழக்கு பார்த்த முகமாக இருக்கும். இதுல சாணம் போட்டு மொழுகி கோலம் போடுவாங்க. இதன் மேற்கு பக்க இறுதியின் மையத்தில் பசு மாட்டு சாணத்தால் கூம்பு வடிவத்தில் ரெண்டு உருண்டை(புள்ளையார்) புடிச்சு வைப்பாங்க. அதுதான் சாமி.

இந்த சாமிக்கு வெத்தல பாக்கு, அருகம்புல், பூ, பழம், தேங்காய், கரும்பு-லாம் வச்சு படச்சிட்டு, வாசலில் அடுப்பு தோண்ட ஆரம்பிப்பாங்க. கடந்த முறை தோண்டிய அதே இடத்துலதான் இப்பவும் தோண்டுவாங்க.

அடுப்பு தோண்டிட்டு, வெறுவ வச்சி புதுசா வாங்கி வச்சியிருக்குற ரெண்டு மண் பானை, ஒரு மண் சட்டிய வச்சி கற்ப்பூரத்தால அடுப்பு மூட்டுவாங்க. இந்த பானை, சட்டியோட கழுத்துல மஞ்சள் கொத்து கட்டுவாங்க. ஒரு பானை பெருசாவும், ஒரு பானை சின்னதாவும் இருக்கும். பெரிய பானையில வெண்பொங்கல், சின்ன பானையில சக்கரைப் பொங்கல், சட்டியில பரங்கிக்காய் கூட்டு வைப்போம்.

பானையில சோறு வேகும்போது பொங்கி வழியும. அப்படி பொங்கும்பொது நாங்க “பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்” அப்படினு சத்தம்போட்டு சொல்லுவோம். அப்பதான் பக்கத்துல இருக்குற எங்க சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்கெல்லாம் தெரியும் எங்க வீட்டுல பொங்கல் பொங்கிடிச்சுனு.

பொங்கல் வெந்ததுக்கு அப்புறம் பானை, சட்டியை அடுப்புலேர்ந்து எறக்கி சாமி பக்கத்துல வச்சி, அதுலேர்ந்து சக்கரைப் பொங்கல் ஒரு பல்லயம், வெண்பொங்கல் ஒரு பல்லயம் எடுத்து சாமி முன்னாடி வச்சி மறுபடியும் படச்சிட்டு, அப்புறமா நாங்க சாப்பிடுவோம். சாமிகிட்ட வச்ச கரும்பை படச்சதுக்கு அப்புறம்தான் தொடவே விடுவாங்க. பொங்கல் வைக்கறது அந்தி சாயறதுக்கு முன்னாடியே வச்சிடனும்.

மாட்டுப் பொங்கல் :
தை 2 – மாட்டுப் பொங்கல் : கொண்டாடட்டத்தோட மூனாவது நாள். மாட்டுப் பொங்கலன்னைக்கு இருக்குற கொண்டாட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆமாங்க, அன்னைக்கு மாட்ட கழுவி குளிப்பாட்டிவிடனும், மாட்டோட கழுத்துல போடறதுக்கு ஒரு மாலை தயாரிக்கனும். அந்த மாலையில என்னென்ன இருக்கும்னா, பொங்க பூ, ஆவாரம் பூ, வேப்பிலை, மா இலை. இதெல்லாம் வேணும். இங்க மாவிலையும், வேப்பிலையும் கெடச்சிடும் ஆனால் பொங்க பூவும், ஆவாரம் பூவும் கெடைக்காது. ஏன்னா, ஊருல இருக்கிறவன் எல்லாம் இதத்தான் தேடிகிட்டு இருப்பான். நமக்கு முன்னாடியெ பல பேரு பொங்க பூவும், ஆவாரம் பூவும் எங்க இருக்குனு செடியை தேடி புடிச்சி ஒடிச்சிகிட்டு போய்டுவான்.
எங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது, நாவ பழம் பறிக்கறதுக்கு நாவ மரம் எங்க இருக்குனு தேடி தோப்புகுள்ள(முந்திரி) சுத்தும்போது ஆவாரம் செடியை பாத்து வச்சிருப்போம். தேவப்படும்போது போய் ஒடிச்சிகிட்டு வந்துடுவோம். எல்லத்தையும் தேடி புடிச்சி கொண்டு வந்து மாலை கட்டி வச்சிடுவோம்.
அதுக்கு அப்புறம் நல்ல நேரம் வந்ததும் வாசல்ல இருக்குற அடுப்புல சக்கரை, வெண் பொங்கல் வச்சு வெந்ததும் சாமிக்கும், மாட்டுக்கும் பல்லயத்துல பொங்கல் வச்சு படச்சிட்டு நாங்க சாப்பிடுவோம். எங்க மாடும் பொங்கல் சாப்பிடும்.
படைக்கும்போது, மாட்டுக்கு நாங்க செஞ்சு வச்ச மாலையை போட்டு பொட்டு வச்சி தீபாராதனை காட்டுவோம். மாட்டுப் பொங்கலன்னைக்கு மாடு மிரட்டனும். காளை மாடா இருந்தா விரட்டி புடிச்சி விளையாடலாம். ஆனால் எங்ககிட்ட இருந்தது பசு மாடு. ஆனாலும் மிரட்டுவோம். எப்படினா, மாட்டுக்கு தீபாராதனை காட்டிகிட்டு மாட்டை சுத்தி வரும்போது எங்க அம்மாவுக்கு பின்னாடியே எங்க வீட்டுல இருக்குற ஒரு பித்தளை தாம்பூலத்தை எடுத்து கைல வச்சிகிட்டு ஒரு குச்சியால தட்டிகிட்டே மாட்டை சுத்தி வருவோம். மாடு சத்தத்துல மிரளும். இப்படிதான் நாங்க மாடு மிரட்டுவோம்.
பசு மாடு சரி, வண்டி மாட்டுக்கு என்ன செய்வோம்னு சொல்றன் கேளுங்க. எங்க தெருவுல எங்க சித்தப்பா ஒருத்தர் வீட்டுல வண்டி மாடு இருந்தது. பொங்கல் பொங்கி சாமிக்கும் மாட்டுக்கும் படச்சி முடிச்சதும், மாட்ட வண்டியில பூட்டிகிட்டு தெருவுல இருக்குற சின்னப் பசங்கல்லாம் வண்டியில ஏத்திகிட்டு ஒரு சுத்து சுத்தி வருவோம். அப்படி சுத்தி வரும்போது, மாமன் மச்சான் உறவு முறையானவர்களது வீடு வரும்போதும், ஊரு முறைக்கு மாமன் மச்சான்னு கூப்பிட்டுக்குறவங்க வீடு வரும்போதும் ஒரு வாசகம் சொல்லி வம்புக்கு இழுப்போம். அது செம கொண்டாட்டமா இருக்கும். அந்த வாசகம் இதோ.

“போகியும் போச்சு, பொங்கலும் போச்சு பொண்ணு குடுறா XXXXXXXXX

இத்தோட மாட்டுப் பொங்கல் முடிஞ்சிடிச்சு.

அடுத்த நாள் கரி நாள். கரி நாள் பொழுது விடியறதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு மிச்சமிருக்கு. அது என்னனா, வாசல்ல தோண்டியிருக்குற அடுப்ப மூடனும். மாட்டுப் பொங்கல் முடிஞ்சு கரி நாள் ஆரம்பிக்கறதுகுள்ள அடுப்பை மூடிவிடனும். அப்படியே சும்மா மண்ண தள்ளி மூடிடக்கூடாது, சில்லரை காசு எதாவது அடுப்புல போட்டு அதுக்கு மேலதான் மண்ண தள்ளனும்.

கரி நாள் :
தை 3 – கரி நாள் : நாட்காட்டியில உழவர் திருநாள்-னு போட்டிருக்கும். ஆனால், நாங்க கரி நாள்-னு தான் சொல்லுவோம். கரி நாளுக்கு என்ன செய்யனும்னா பொங்கலுக்கு வாங்கின புத்தாடையை போட்டு அழுக்காக்கனும். அதாங்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என அனைவருக்கும் விளையாடுவதற்க்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ள நாள்.
எங்க வட்டாரத்துல கபடி, கோட்டி புல், ஓட்டப் பந்தயம், கும்மி.. இப்பலாம் மட்டைப் பந்துனு நாள் முழுக்க கொண்டாட்டம்தான். இப்பலாம் யாரும் கும்மி அடிக்கறதில்லை ஒரு சில ஊருல அதுவும் சில தெருக்கள்ல தான் கும்மி அடிக்கறாங்க.
எங்க தெருவுல மொத்தம் ரெண்டே குடும்பம்தாங்க. நான் ஆறாவது படிக்கும்போது எங்க குடும்பத்துல 12 வீடும், இன்னொரு குடும்பத்துல 6 வீடும் இருந்துச்சு. ஒவ்வொரு வீட்டுலயும் பசங்க பொண்ணுங்கனு நெறைய பேரு இருப்பாங்க. அதனால அப்பலாம் எங்க தெருவே செம கொண்டாட்டமா இருக்கும். அப்பலாம், என்ன மாதிரியான சின்ன பசங்களையெலலாம் நடுவுல உக்கார வச்சிட்டு பாட்டு பாடிகிட்டு கும்மி அடிப்பாங்க.
கரி நாள் எந்த அளவுக்கு கொண்டாட்டமான நாளோ அதே அளவுக்கு ஆபத்தான நாளும்தான். கரி நாள் அன்னைக்கு அடிதடி, வெட்டு குத்தெல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும். பொதுவா கபடி விளையாட்டுலதான் பிரச்சனை அதிகமா இருக்கும். எவ்வளவுதான் கொண்டாட்டமா இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இது.

குறிப்பு :
இந்த பதிவில் எங்கள் வட்டாரத்தில் பேசுகிற மாதிரியான வார்த்தைகள் நிறைய பயன்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். புரியாத வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க காத்திருக்கிறேன்.


அன்புத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புத் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி : கூகிள் [படம்]