திங்கள், 4 பிப்ரவரி, 2013

பேரழிவில் : கடலூர் மாவட்டம் - நடு நாடு

சிறப்பு :


இப்போது இருக்கும் நம் தமிழ்நாடு பழங்காலத்தில் எத்தனை நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என ஒரு கேள்வி கேட்டால், நமது பதில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு, தொண்டை நாடு என வரிசையாக சொல்லுவோம். ஆனால், இந்த வரிசையில் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தெரியாத ஒரு நாடு, சோழரும் பல்லவரும் பற்ப்பல வெற்றிகளை குவித்து வரலாறு படைக்க உறுதுணையாகவும் காரணியாகவும் வீரத்தின் ஆணி வேராகவும் இருந்த நாடு. பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என அனைவரும் போட்டி போட்டு அடைய நினைத்த வற்றாத வளம் கொண்ட நாடு. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் இன்றளவும் போற்றி வளர்த்துவரும் நாடு. தமிழனின் முதல் கலையாம் “தெருக்கூத்தை” இன்றும் நடத்தி வரும் நாடு. ஒவ்வொரு ஆடி மாதமும் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும்போது இத்திருநாட்டின் எந்த கிராமத்திற்க்கு சென்றாலும் நீங்கள் தெருக்கூத்தை காண இயலும்.

பார்ப்போர் மனதை பறிக்கச் செய்யும் எழிலும் வளமும் கொண்ட நாடு. சமதளத்தில் ஊற்றெடுக்கும் வளம் கொண்ட ஒரே நாடு. கற்பனை பாத்திரமல்லாத உண்மை வள்ளல்களுள் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வள்ளற் கொடையோன் காரி ஆண்ட நாடு. ஐவகை நிலங்களில் பாலை நிலத்தை தவிர்த்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலங்களையும் கொண்ட நாடு. எங்கள் நாடு “நடு நாடு”. இன்றைய பொதுத்தமிழில் உள்ள, கிட்டதட்ட எல்லா வார்த்தைகளுமே எங்கள் நடு நாட்டு தமிழோடு பொருந்திப்போகும். ஒரு உதாரணம் தேங்காயின் மேலோட்டினை பொதுத்தமிழில் “கொட்டான் குச்சி” என்று அழைப்பர். எங்கள் நடு நாட்டுத் தமிழில் அதற்க்குப் பெயர் “கொட்டாஞ்சி”.

நம் தமிழ்நாட்டில், வடக்கில் தென்பெண்ணை ஆற்றையும், தெற்கில் வெள்ளாற்றையும், கிழக்கில் வங்க கடலையும், மேற்கில் கல்வராயன் மலைத்தொடரையும் எல்லைகளாக கொண்ட பகுதி “நடு நாடு” ஆகும்.



தற்போதைய வரைபடத்தில் கடலூர் மாவட்டம் முழுமையும் மற்றும் விழுப்புரம் மாவட்ட்த்தின் சில பகுதிகள் நடுநாட்டின் எல்லைகளுக்குள் அடங்கும்.

பேரிடர்கள்: 

எல்லோருக்கும் பிடித்தமான எங்கள் நடு நாட்டினை இயற்கைக்கும் ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது தன் பணியாட்களை ஏவி எங்கள் வளங்களில் தனக்கும் பங்கு வேண்டும் என எங்கள் விருப்பத்தை கேட்காமலே தான் விரும்பிய அனைத்தையும் எடுத்துச்சென்றுவிடும்.

இப்பதிவில், இதுவரை நடு நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை, நான் படித்து தெரிந்துகொண்டவைகளையும் என் நேரடி அனுபவங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்.

இயற்கையின் ஏவலினால் எங்கள் நடு நாட்டிற்க்கு அடிக்கடி வந்து செல்பவை காற்றின் துணை கொண்டு ஆகாய மார்கமாக புயலும், நீரின் துணைகொண்டு தரை வழியாக வெள்ளமும் தான். எத்தனை முறை எங்கள் வளங்கள் இயற்கையால் கொள்ளையடிக்கப்பட்டாலும் கலங்கியதில்லை கடலூர் மாவட்டம்(நடு நாடு). இயற்கை எங்களை எத்தனை முறை தாக்கியிருக்கிறது எனத்தெறிந்தாலே எங்களின் மீள் எழுச்சி உங்களுக்கு புரியும். இதோ நான் தெரிந்துகொண்டவைகள் உங்களுக்காக.

1681ம் ஆண்டு புயலின் கோரத்தாண்டவம் எங்கள் நடு நாட்டில் நர்த்தனமாடியிருக்கிறது. அடுத்த 65 ஆண்டுகளுக்கு ஏதும் செய்யாத இயற்கை உங்களுக்கு ஓய்வு அதிகமாக கொடுத்துவிட்டேன் என “NOV 1745”ல் மீண்டும் புயலாய் வந்து சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கைகொட்டி சிரித்திருக்கிறது. என் நடு நாட்டு மக்கள் இயற்கையை முறைத்துப் பார்த்திருப்பார்கள் போலும், அடுத்த “APRIL 1749”லும் “OCTOBER 1752” லும் வந்து சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் துடைத்து வாரி சென்றிருக்கிறது.

அனைத்தையும் துடைத்து எடுத்து சென்றதாலேயோ என்னவோ அடுத்த 100 ஆண்டுகளுக்கு பெரிதாக எந்த தாக்குதலும் நடந்ததற்க்கான தகவல்கள் இல்லை. மீண்டும், சற்று செல்வ செழிப்போடு வளம்பெற்றுவிட்டார்கள் என்றறிந்த இயற்கை “DECEMBER 1853”ல் அழையா விருந்தாளியாக வந்து எங்களை சுருட்டி வாரி சென்றிருக்கிறது. அடுத்து சிறிதளவு ஓய்வு கொடுத்து 20 வருட இடைவெளியில் 1874 ம் ஆண்டில் சூறாவளி காற்றினால் சுழட்டி அடிக்கப்பட்டுள்ளது எங்கள் நடு நாடு. இதனிடையே 1864ம் ஆண்டு கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட வெள்ள பெருக்கு. கரையோர கிராமங்களை கரைத்தே எடுத்திருக்கிறது. அடுத்தடுத்து 1884லிலும் 1898லும் பல பகுதிகளை கெடிலம் துணைகொண்டு வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறாள் இயற்கை.

1902 ல் ஒரு புதிய பிரச்சனை, கடலூர் செம்மண்டலம் அருகே தென்பெண்ணையாற்றில் உடைப்பு ஏற்பட்டு நீர் நகருக்குள் புகுந்துள்ளது அதே சமயம் கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு. இதனால் கடலூர் நகரம் மார்பளவு நீரில், வெள்ளக்காட்டில் மூழ்கி தத்தளித்திருந்திருக்கிறது. 1913ல் மீண்டும் வெள்ளப்பெருக்கு. தண்ணீரில் தவித்திருக்கிறது நடு நாடு. கடலூர் நகருக்கு எப்போதும் போல இப்போதும் பெருத்த சேதம்.

அடுத்த 40 ஆண்டு காலம் சீரோடும் சிறப்போடும் செழிப்போடும் இயற்கையின் தொந்தரவு இல்லாமல் அமைதியாகவும் இனிமையாகவும் நகர்ந்துள்ளது. அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது. 1916ம் ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத ஒரு பெரும் புயல். இதுவரை எங்கள் வளங்கள் மீது மட்டுமே அதிக ஆசை கொண்டு அழித்தொழித்த இயற்கை, இம்முறை ஏதுமறியா எம்மக்கள் மீது அதீத ஆசை கொண்டு ஆயிரகணக்கானோரை அழைத்துச்சென்று/அடித்துச்சென்று வெற்றுடலை விரவி கிடத்தியது.

1913லும் 1924லும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. செய்வதறியாது தவித்த மக்களை சீர்குலைத்திருக்கிறது இயற்கை. தொடர்ச்சியாக புயலை மட்டுமே அனுப்பினால் மக்களுக்கு அலுப்பு தட்டிவிடும் என்பதாலேயே புயலையும் மழையையும் மாறி மாறி அனுப்பியிருக்கிறாள் இயற்கை அன்னை.

1930ல் மீண்டும் புயல். இம்முறை புயலுடன் பெரு மழையை துணைக்கு அனுப்பியிருந்தாள் இயற்க்கை அன்னை. தொடர்ச்சியாக 36 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. மனித நடமாட்டமே முற்றிலும் முடங்கியது. கடலூர் மாநகரம் வீராணம் ஏரி போல் விசாலமாக காட்சியளித்தது மழையில் தாக்குதலால்.

1931ல் மீண்டும் வெள்ளம். கட்டற்று கரை புரண்டு ஓடியிருக்கிறது.

1933ம் ஆண்டு. இம்முறை இயற்கை அன்னை வேறொன்றை பரிச்சித்து பார்த்திருக்கிறாள். புயலை அனுப்பி கடல் அலைகளை 6 அடி உயரம் வரை மேலெழுப்பி அதை நகரினுல் அனுப்பி சேத விவரம் கணக்கிட்டுள்ளாள். 2004ம் ஆண்டின் ஆழிப் பேரலைக்கு வெள்ளோட்டம் பார்த்திருப்பாள் போலும்.

1937 மற்றும் 1939 ல் மீண்டும் வெள்ளத்தால் மாபெரும் பாதிப்பை சந்தித்தது நடு நாடு. இம்முறையும் கடலூர் நகரம் பெரிதாய் பாதிக்கப்பட்டது.

1941, 1943ம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் புயல் தனது கோரத்தாண்டவத்தை நடு நாட்டில் ஆடியது.

அடுத்தடுத்த தாக்குதல்களை மழைகொண்டு மட்டுமே தாக்க எண்ணிய இயற்கை அன்னை 1946, 1955, 1963, 1966 ஆகிய ஆண்டுகளில் மழையால் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தினாள். இவ்வெள்ளப்பெருக்கின் போது கடலூர் நகரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இதுவரை நாம் கண்டது நம்மில் முக்கால்வாசி பேர் பிறப்பதற்க்கு முன்னர் நடு நாட்டில் நடந்த இயற்கை பேரிடர்கள். இனி நம் கண்முன்னே நடந்த சிலவற்றை பார்ப்போம்.

“சுனாமி” – ஆழிப்பேரலை :
26-12-2004. 2004ம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்த ஒரு பேரழிவு. “சுனாமி” என வெளி நாட்டினரால் பெயர் வைக்கப்பட்ட ஆழிப்பேரலையின் கொடூர தாக்குதல். அதுவரை எவரும் எதிர்பார்த்திராத, புயல், வெள்ளத்தின் போது எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் எம் நடு நாட்டு கடற்கரையோர மக்கள் மீது, இப்போது என்ன செய்வீர்கள் என்ற ஏளன பார்வையுடன் இறுமாப்புடன் இயற்கையால் தொடுக்கப்பட்ட வன்மமான தாக்குதல். 1933ம் ஆண்டு வெள்ளோட்டம் பார்த்ததை வெற்றிகரமாக நடத்திகாட்டினாள் இயற்கை அன்னை.

 


அன்று ஞாயிற்று கிழமை, வழக்கம்போல அதிகாலை 11 மணிவரை உறங்கிவிட்டு வெளியே வந்தேன். சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த எனக்கு பகீரென்று ஆனது. இயற்கை அன்னை கடல் கொண்டு தாண்டவம் ஆடுவதை காட்டிக்கொண்டிருந்தனர்.கடலூரைப் பற்றிய ஒளிப்படங்கள் ஏதும் இல்லை.

புரளி மட்டும் காட்டுத்தீயைவிட வேகமாக பரவிக்கொண்டிருந்த்து. கடல் நீர் குள்ளஞ்சாவடியைத்(ஊர்) தாண்டி வந்து கொண்டிருக்கிறதென்றும், பேருந்துகள் குள்ளஞ்சாவடிக்கு மேல் போகவில்லை என்றும் வெகு வேகமாய் பரவியது புரளி.

எங்க அப்பா தியாகவல்லியில்(ஊர்) இருக்கும் எங்கள் அத்தை வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை தொலைபேசி அழிப்பின் மூலமாக உறுதி செய்துகொண்டிருந்தார். தியாகவல்லி கடல் அருகில் இருக்கும் நெய்தல் நில கிராமங்களில் ஒன்று.

எங்க அப்பா பேரலைத் தாக்குதல் நடந்த மூன்றாம் நாள் எங்கள் பெரியார் கலைக் கல்லூரி இருக்கும் தேவனாம்பட்டினம் பகுதிக்கு சென்று வந்தார். இரண்டு மூன்று சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாக வந்து சொன்னார். அப்போது நான் அக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். பேரலையால் அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியும் வரை எங்கள் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருந்தனர்.



ஆறாவது நாள் நானும், என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை பார்த்துவர சென்றிருந்தோம். கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தேவனாம்பட்டினத்திற்க்கு தனியார், அரசு பேருந்துகள் அனைத்தும் இலவச சேவையை மேற்க்கொண்டிருந்தன. எங்கள் கல்லூரியின் சுற்றுசுவர் முற்றிலுமாக தரைமட்டமாகியிருந்தது. கல்லூரியில் 5.5 அடி தண்ணீர் நின்றிருந்த்தற்க்கான சுவடுக்கள் சுவற்றில் தெரிந்தன. எங்கள் கல்லூரியின் சிற்றுண்டிசாலையின் மாடியில் ஒரு படகு கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதை அப்புறபடுத்தியிருந்தனர். எங்கள் கல்லூரியில் பேரலை நீர்தேக்க அளவு குறிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை காணலாம்.
என் நண்பன் கிருஷ்ணமூர்த்தி தேவனாம்பட்டினத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். அந்த வீட்டு உடைமையாளர் மனைவியும் இப்பேரலையால் இறந்துவிட்டார் என்ற செய்தி மேலும் சோகத்தை அதிகரித்தது.



அப்போது தான் எங்க வெள்ளி கடற்கரையில(Silver Beach) புதுசு புதுசா நிழற்குடை-லாம் கட்ட ஆரம்பிச்சியிருந்தாங்க. 15 அடி உயரம் எழுப்பியிருந்த நிழற்குடை கட்டிடம் மண்ணோடு மண்ணாக கலந்து தரையோடு தரையாக இருந்தது. கடற்கரை நெடுக இருந்த இருக்கைகள் ஒன்றையும் காணவில்லை. கடலோர காவல்படை கட்டிடம் தரைமட்டமாயிருந்தது.

இயற்கையின் இக்கொடூர தாக்குதலால் ஆயிரக்கனக்கானோர் உயிரிழந்து, வீடிழந்து, பொருளிழந்து நின்றது மட்டுமே மிச்சம். ஏனோ இயற்கையின் கோர முகம் எங்களை விட்டு எப்போதும் நீங்குவதாக இல்லை.

மழை :
அடுத்தகட்ட தாக்குதல் மழை உருவில், நவீன யுகத்திலும் என்னை மிஞ்ச எவனும் இல்லை என 2005, 2006ம் ஆண்டுகளில் கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது மழை. நடுநாடு முழுக்க வெள்ள மயம். கடலூர் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் மழையின் பாதிப்பு வெகுவாக இருந்தது.
எங்க ஊருல முட்டிகால் உயரம் தண்ணீர் நின்னா சிதம்பரம் கோயில் கோபுரம் மூழ்கிவிடும் அப்படினு சொல்லுவாங்க. இந்த மழையால சிதம்பரம் முழுக்க ஏரி போலவே காட்சி அளித்தது.

தானே புயல் :
30-12-2011. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் புயல். சும்மா சுழட்டி சுழட்டி அடிச்சதுல ஊரையே சலவைக்குப் போட்ட மாதிரி சுத்தமா இருந்துச்சி. இந்த புயல் சமயத்துல நான் சென்னைல இருந்தேன். புயல் விட்டதுக்கு அப்புறம் ஊருக்கு வந்து பாத்தா.. மொத்த ஊரும் பளிச்சுனு இருக்கு. கொல்லைல இருக்குற ஒரு மரம் செடி கூட முழுசா இல்ல. முந்திரி மொத்தமும் திருவிகிட்டு கெடக்கு. மாமரம், பலா மரமெல்லாம் மொட்டை மொட்டையா நிக்குது. ஓட்டு வீடு, கூரை வீடெல்லாம் பாதிக்கு மேல காணாம போயிடிச்சு. ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் மொத்தமா அடியோட பாதிக்கப்பட்டுடிச்சு. சீரோடும் சிறப்போடும் சீர்மோவும் பட்டோடும் ஓரளவிற்க்கு செல்வ செழிப்போடும் இருந்த எம் மக்களை தானாகவே வந்து தகர்த்தெரிந்து போய்விட்டாள். புயலுக்கும் பெயரை “தானே” என சூடிவிட்டனர்.



குறிப்பு : இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள் திரு. வீணங்கேணி வி.சண்முகம் அவர்களால் எழுதி அறிவன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “நெய்வேலி மண்ணும் மக்களும்” எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. மேலும் இப்பதிவில் ஒரு வரி கூட அந்நூலில் இருப்பதை போல இருக்காது. தகவல்கள் மட்டுமே பெறப்பட்டவை.

நன்றி : கூகிள்[படம்]

8 கருத்துகள்:

  1. உங்கள் படம் பாருங்கள்
    http://vaiyan.blogspot.ca/2014/08/kurunthogai-annotation-260.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா,

      அந்த படம் என்னுடையது அல்ல. நான் கூகிள்(Google) தேடு பொறியில்(Search Engine) கண்டெடுத்தேன்.

      நீக்கு
  2. தமிழ்மணம் பகுதியில் நடு நாட்டைப்பற்றி தெரிந்துகொண்டேன் அன்புதுரைக்கு என்ஆழ்மனதின் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நன்றிகள்

    பதிலளிநீக்கு