பாளையக்காரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாளையக்காரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஏப்ரல், 2014

மறைந்துபோன சுவடுகள் : கீழூர் பாளையக்காரர்களின் காவல் மற்றும் ஏவல் பணியாளர்கள்


கீழூர் ஜமீனைப் பற்றியும், அப்பாளையக்காரர்களைப் பற்றியும் ஏற்கனவே சிறிதளவு நாம் கண்டுள்ளோம். இந்த பதிவில் அவர்களுடைய படை பரிவாளங்களைப்பற்றி காணலாம்.

காவலர்களும், ஏவலர்களும் :
கீழுர் பாளையக்காரர்களின் காவலர்களையும், ஏவலர்களையும் அருகருகே உள்ள கிராமங்களில் குடியமர்த்தினர். அத்தகைய கிராமங்களையும் கீழூர் பாளையக்காரர்களுக்கு அம்மக்கள் என்னவாக இருந்துள்ளனர் என்பதையும் கிராமம் வாரியாக காணலாம்.

பாச்சாரபாளையம் :
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கலவரம் நடந்ததே அதே கிராமம்தான். கீழூர் பாளையக்காரர்கள் தங்களின் வீரம்மிக்க போர்படையை குடியமர்த்திய இடம். பாச்சாரபாளைய கிராமமக்கள் அனைவரும் கீழூர் பாளையக்காரர்களின் போர்படை வம்சத்தினர். நான் கேள்விப்பட்டவரை கீழூர் பாளையக்காரர்களின் படை மூர்கத்தனமான எதற்கும் அஞ்சாத படையாக இருந்துள்ளது.

பாச்சாரபாளையம் காலனி :
கீழூர் பாளையக்காரர்களின் போர்க்குதிரைகளை பராமரிக்கும் பணியாளர்களை குடியமர்த்திய இடம். கீழூர் பாளையக்காரர்களின் குதிரைகள் எப்போதும் நல்ல நலத்துடன் வலிமையானவைகளாக இருக்கும். குதிரைகள் கீழூர் பாளையக்காரர்களின் கௌரவத்திற்கு அங்கமாக விளங்கியுள்ளது. அவர்கள் குதிரைகள் மீது எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

கீழூர் – இருளன் தோட்டம் :
இருளர்கள் : கீழூர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். கீழூர் அரசரின் அரண்மனையை ஒட்டி கிழக்கில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். தற்போது இருளர் சமூகத்தவர் எவரும் கீழூரில் இல்லை. மேலும் இருளன் தோட்டம் என்றால் பெரும்பாலும் எவருக்கும் தெரியாது.
தற்போதைய ஜமீன்தாரின் தம்பிகளும் பாளைய வம்சத்தவர்களும் இவ்விருளன் தோட்ட பகுதியிலும் அதற்கு கிழக்கிலும் வசித்து வருகிறார்கள்.

கீழூர் – துலுக்கன் தெரு :
துலுக்கர்கள் அதாவது இசுலாமியர்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து இம்மன்னர்கள் மீது அன்புகொண்டு இவர்களுடன் வந்தவர்கள். அரசாங்க கணக்கு வழக்குகளை கவனித்துகொள்வதற்க்காக நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உள்ள ஒரு சிறப்பு பாளையக்காரர்களின் திருமண ஊர்வலத்தின்போது அனைவருக்கும் முன்பாக தவாலி அணிந்துகொண்டு முன்செல்வர். அவரை தொடர்ந்தே பிறர் செல்வர். இவர்கள் அரண்மனையை ஒட்டி மேற்கில் குடியமர்த்தப்பட்டனர். தற்போது கீழூரில் ஒரே ஒரு இசுலாமியர் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் அரண்மனை சேவகம் செய்து வந்தவர்களின் வாரிசா என உறுதி செய்யப்பட வேண்டும்.

கீழூர் – மேற்கு தெரு :
இவர்கள் அரண்மனையில் என்ன விதமான பணிகளை செய்து வந்தனர் என்பது சரிவர தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் அரண்மனையில் உள்ள அனைவரிடத்திலும் நினைத்த நேரத்தில் எளிதில் பேச முடியும் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். தற்போது தங்களை “நயினார்” என்று அழைத்துகொள்ளும் இவர்களது முன்னோர் கீழூர் பாளையக்காரர்களால் “பூக்கட்டி பண்டாரத்தார்” என்றே அறியப்பட்டுள்ளனர்.

கீழூர் காலனி :
இவர்கள் கீழூர் பாளையக்காரர்களின் அரண்மனையின் தெற்கு புறத்தை காவல்காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் பறை இசைத்து வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

கோவில் குப்பம் :
வண்ணார், வாணியர், மருத்துவர்(முடி திருத்துவோர்) போன்ற தொழிலாளர்களை அருகிலுள்ள கோவில்குப்பம் கிராமத்தில் குடியமர்த்தி அரண்மனைக்கு பணிபுரிந்து வர பணித்திருக்கின்றனர்.

விழப்பள்ளம் :
இது தற்போதைய குறிஞ்சிப்பாடி நகரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. அரண்மனையின் பண்ணை வேலைகளை செய்வோரை விழப்பள்ளத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிள்ளை பாளையம் :

கீழூரையொட்டியுள்ள வேகாக்கொல்லை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது இப்பிள்ளைபாளையம் கிராமம். பிள்ளை பாளையம் பகுதியானது தனது அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டி அரசரால் தானமாக வழங்கப்பட்ட கிராமம். அமைச்சர் பிள்ளை சாதியை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதிக்கு பிள்ளைபாளையம் என பெயர்சூட்டி வழங்கியிருக்கிறார்.

வெள்ளி, 17 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனை கிணறுகள்.



அரண்மனை கிணறுகள் :

       கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனையில் எஞ்சியுள்ள மிச்சங்கள் இந்த கிணறுகள்தான். எஞ்சியுள்ள மிச்சமும் மிக விரைவில் அழிந்துப்போகும் நிலத்தில் நீர் இல்லாமல்.

1.       அரண்மனை கிணறு :

அரண்மனையில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிணறு/கேணி. இக்கிணறு அரண்மனையின் மையப்பகுதியில் இருந்துள்ளது. கீழுர் பாளையக்காரர்களின் வீட்டு பெண்களை வெளி ஆட்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத விதியாகவே இருந்துள்ளது. அதனாலேயே இக்கிணறு அரண்மனையின் மையத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.




2.       கொட்டடி கிணறு :

இக்கிணறு அரண்மனையின் சமையலுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்காக வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறு அரண்மனையின் தெற்கில் உட்புறமாக இருந்திருக்க வேண்டும்.



 3.       தங்கசாமி கிணறு :

இக்கிணற்றிற்க்கு தற்காலத்தில் மட்டுமே தங்கசாமி கிணறு என பெயர் வந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதுதான் இந்த தங்கசாமி பாளையக்காரர் இறந்தார். அவரின் பெயரால் தான் இக்கிணறு வழங்கப்பட்டு வருகிறது. ஆதியில் இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இக்கிணறு அரண்மனையின் கிழக்கு புறத்தில் இருந்துள்ளது.

இக்கிணறு இருளந்தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது இருளர்கள் கீழுர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். அதனாலேயே இவர்கள் அரண்மனைக்கு மிக அருகில் கிழக்கு புறமாக குடி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு அவர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




4.       துளுக்கன் கிணறு :

இங்கு துளுக்கன் என்பது இசுலாமியர்களை குறிக்கிறது. இவர்கள் வட நாட்டில் பாஞ்சால தேசத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலிருந்தே இவர்களுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது இசுலாமியர்கள்தான் வெண்குடை ஏந்தி முன்செல்வார்களாம். மேலும் இவர்களுக்கு அரண்மனையின் கணக்கு வழக்கு சம்பந்தமான பொருப்புகளும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனாலேயே இவர்களுக்கு அரண்மனையை ஒட்டி மேற்க்கு புறத்தில் இடம் ஒதுக்கி இவர்களை அருகிலேயே வைத்திருந்துள்ளனர். இக்கிணறு அரண்மனையின் மேற்க்கு புறத்தில் இருந்துள்ளது. இது இசுலாமியர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




5.       தெரு கிணறு :
இக்கிணறு அரண்மனையின் தெற்க்கில் இருந்துள்ளது. இது ஊர் மக்களின், வழிப்போக்கர்களின் குடிநீர் தேவைக்காக, தாகம் தீர்க்க வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு தற்போது சுவடே இல்லாமல் துந்துபோயுள்ளது.

குறிப்பு : அரண்மனை மற்றும் கொட்டடி கிணற்றைத் தவிர்த்து ஏனைய கிணறுகள் அரண்மனையின் உட்புறத்தில் இருந்தனவா அல்லது அரண்மனைக்கு வெளிப்புறத்தில் இருந்தனவா என்பதும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால், இவ்வைந்து கிணறுகளும் அரண்மனையை சார்ந்தவையே.

புதன், 15 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் போர்வாளும்



எந்த ஒரு நாட்டிற்க்கும் இன்றும் அன்றும் அடையாளமாக விளங்கியது/விளங்குவது அவர்களின் கொடிதான். அக்கொடியை வடிவமைப்பதில் மிக கவனமாக இருந்திருப்பார்கள்/இருப்பார்கள். ஒரு நாட்டின் கொடியின் விளக்கத்தை வைத்தே அந்நாட்டின் தன்மையையும் வளமையையும் அளவிடலாம்.

நான் இங்கே தெரிவிக்கப்போவது கீழுர் பாளையக்கார அரசின் கொடியைப்பற்றிதான். அக்காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டின் கொடியை பெரும்பாலும் கிடைமட்டமான முக்கோண வடிவத்திலேயே அமைத்திருந்தனர். அதற்க்கான காரணம் எனக்கு தெரியாது. கீழுர் பாளையக்காரர்களின் கொடியும் அத்தகைய கிடைமட்ட முக்கோண வடிவிலான கொடிதான்.

கீழுர் பாளையக்காரர்களின் கொடியானது காவி வண்ணத்தில் கிடைமட்ட முக்கோண வடிவத்தில் நீண்டு காணப்படும். கொடியின் மையத்தில் வெள்ளை நிற பசு ஒன்று முன்னோக்கி நின்றவாறு காட்சி தரும். இதுதான் அக்கொடி. நானே வரைந்தது.



18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தற்போது பாச்சாரபாளையம் என்று அழக்கப்படும் பகுதிக்கு வந்து பாளையம் அமைத்து வடகுத்து ஜமீனிடமிருந்து 8 கிராமங்களை சூழ்ச்சியால் கைப்பற்றி புகழ்பெற்ற பாளையக்காரராக விளங்கிய “ஆன தாண்டவ ராய பாச்சாள நயினார்” அவர்களின் போர்வாள்தான் இது.



கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையான இப்போர்வாள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரிய சேதியாக இருக்கிறது.

இவ்வாளினைப் போலவே அளவில் இதை விட சற்று குறைவான இரண்டு போர்வாளும் ஒரு குத்து வாளும் இருக்கிறது. ஆனால், அது வேறொருவரிடம் இருக்கிறது. அதனால் அதனைப் பெறுவதில் ஒரு சிறு சிக்கல்.

பல பேரின் உயிர் குடித்த போர்வாள், சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் கூர் மங்காமலேயே இருக்கிறது.

இப்போர்வாளினை ஒத்த வார்த்தெடுக்கப்பட்ட போர்வாளினை கீழுர் பாளையக்காரர்களின் உறவு முறை ஜமீங்களான அரியலூர், வட கால் போன்ற ஜமீங்களிலும் காணலாம்.