வெள்ளி, 17 மே, 2013

மறைந்துபோன சுவடுகள் : கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனை கிணறுகள்.



அரண்மனை கிணறுகள் :

       கீழுர் பாளையக்காரர்களின் அரண்மனையில் எஞ்சியுள்ள மிச்சங்கள் இந்த கிணறுகள்தான். எஞ்சியுள்ள மிச்சமும் மிக விரைவில் அழிந்துப்போகும் நிலத்தில் நீர் இல்லாமல்.

1.       அரண்மனை கிணறு :

அரண்மனையில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிணறு/கேணி. இக்கிணறு அரண்மனையின் மையப்பகுதியில் இருந்துள்ளது. கீழுர் பாளையக்காரர்களின் வீட்டு பெண்களை வெளி ஆட்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பது அவர்களின் எழுதப்படாத விதியாகவே இருந்துள்ளது. அதனாலேயே இக்கிணறு அரண்மனையின் மையத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.




2.       கொட்டடி கிணறு :

இக்கிணறு அரண்மனையின் சமையலுக்கு தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்காக வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறு அரண்மனையின் தெற்கில் உட்புறமாக இருந்திருக்க வேண்டும்.



 3.       தங்கசாமி கிணறு :

இக்கிணற்றிற்க்கு தற்காலத்தில் மட்டுமே தங்கசாமி கிணறு என பெயர் வந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதுதான் இந்த தங்கசாமி பாளையக்காரர் இறந்தார். அவரின் பெயரால் தான் இக்கிணறு வழங்கப்பட்டு வருகிறது. ஆதியில் இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இக்கிணறு அரண்மனையின் கிழக்கு புறத்தில் இருந்துள்ளது.

இக்கிணறு இருளந்தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது இருளர்கள் கீழுர் பாளையக்காரர்களின் பல்லக்கு தூக்கிகள். அதனாலேயே இவர்கள் அரண்மனைக்கு மிக அருகில் கிழக்கு புறமாக குடி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு அவர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




4.       துளுக்கன் கிணறு :

இங்கு துளுக்கன் என்பது இசுலாமியர்களை குறிக்கிறது. இவர்கள் வட நாட்டில் பாஞ்சால தேசத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலிருந்தே இவர்களுக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்துள்ளது. இவர்களின் திருமண நிகழ்ச்சியின் போது இசுலாமியர்கள்தான் வெண்குடை ஏந்தி முன்செல்வார்களாம். மேலும் இவர்களுக்கு அரண்மனையின் கணக்கு வழக்கு சம்பந்தமான பொருப்புகளும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனாலேயே இவர்களுக்கு அரண்மனையை ஒட்டி மேற்க்கு புறத்தில் இடம் ஒதுக்கி இவர்களை அருகிலேயே வைத்திருந்துள்ளனர். இக்கிணறு அரண்மனையின் மேற்க்கு புறத்தில் இருந்துள்ளது. இது இசுலாமியர்களின் குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.




5.       தெரு கிணறு :
இக்கிணறு அரண்மனையின் தெற்க்கில் இருந்துள்ளது. இது ஊர் மக்களின், வழிப்போக்கர்களின் குடிநீர் தேவைக்காக, தாகம் தீர்க்க வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் இக்கிணறு தற்போது சுவடே இல்லாமல் துந்துபோயுள்ளது.

குறிப்பு : அரண்மனை மற்றும் கொட்டடி கிணற்றைத் தவிர்த்து ஏனைய கிணறுகள் அரண்மனையின் உட்புறத்தில் இருந்தனவா அல்லது அரண்மனைக்கு வெளிப்புறத்தில் இருந்தனவா என்பதும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் எனக்கு தெரியாது. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால், இவ்வைந்து கிணறுகளும் அரண்மனையை சார்ந்தவையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக