வியாழன், 11 ஏப்ரல், 2013

மறுமொழி மற்றும் பின்னூட்டமிட பயமாயிருக்கிறது..!!?


வணக்கம்,

எந்த ஒரு பதிவிற்க்கும் பின்னூட்டமிடுவதற்க்கு முன் அதிகமாக யோசிக்க வேண்டியுள்ளது. நேர்மறை பின்னூட்டத்திற்க்கு பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எதிமறை பின்னூட்டத்திற்க்கு நிச்சயமாக யோசித்தே ஆக வேண்டும்.

அதுவும் பல கட்டமாக யோசிக்க வேண்டும். முதலில் பதிவர் பிரபலமானவரா..!!? என்பதை அறிய வேண்டும். ஏன் சொல்றேனா..!!? பல பிரபல பதிவர்கள் நம்ம மறுமொழிக்கு எப்படி பதில் சொல்லுவாங்கனே தெரியாது. பொதுவா நெறைய பேர்கிட்ட ஒரு நக்கல் இருக்கு. அவங்க பதிவு பத்தின நம்மளோட புரிதல் தப்புனா.. நீங்க தவறாக புரிஞ்சிகிட்டு இருக்கீங்கனுகூட சொல்லமாட்டாங்க.. நம்மள காய்ச்சிடுவாங்க.. அதுவும் அவங்களுக்கு தமிழ் கொஞ்சம் நல்லா தெரிஞ்சிட்டா அவ்ளோதான்.. வெகுவாக உங்களை பாதிக்ககூடிய அதே சமயம் மென்மையான வார்த்தையை போன்ற வன்மையான வார்த்தைகளை பிரயோகித்து கிழி கிழினு கிழிச்சிடுவாங்க.

இங்கு எதிர்மறை கருத்துகளுக்கு மென்மையான பதிலளிப்போர் மிக்க் குறைவு. நீங்கள் எதிர் கருத்தை பதிவு செய்கிறீர்கள் என்றால் அதற்க்கு உங்களை திட்டுவதைப் போலவே பதிலளிப்பர். இரு மாதிரியான நிலைகொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவர்.

தமிழில் பாடல்களுக்கு சுவை கூட்ட வஞ்ச புகழ்ச்சி அணி என்ற ஒரு அணி இருக்கிறது. அவ்வணியை உரைநடையில் மிகச் சிறப்பாக இவர்கள் பயன்படுத்துவதை காணலாம். ஆகமொத்தம் நீங்க அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்கருத்தை நிறுத்த வேண்டும். இன்னும் ஒரு சிலபேரு இருக்காங்க உங்களோட மறுமொழியை சீண்டவேமாட்டாங்க. இல்லனா உங்களுக்கு விளக்கம் சொல்றேன்ற பேருல திட்டுவாங்க.



“மாப்புள இவந்தான் எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற எவனோ வாங்குனா மாதிரி அவுத்துவிடுறான் பாத்தியா..!!”   அப்படினு நீங்க நெனைக்கறது எனக்கு தெளிவா கேக்குது. சொல்றன்..

ஒரு மூனு நாலு மாசத்துக்கு முன்னாடினு நெனைக்கிறன், நான் ஒருத்தரோட பதிவுல ஒரு எதிர்மறை மறுமொழி எழுதினேன். எழுதினதுக்கு அப்புறம் ஏன்டா எழுதினோம்னு ஆகிபோச்சு.. சேதி என்னனா, அவரு தன்னோட வலைப்போவோட தலைப்பை தான் சார்ந்த வருணாசிரம வகுப்பின் படி மாத்தி ஒரு பதிவு எழுதியிருந்தாரு. நான் எனக்கே சொந்தமான தெரிஞ்ச கொஞ்சோண்டு அறிவை வைத்துக்கொண்டு ஒரு கேள்வி கேட்டேன். “ ஏங்க நீங்க இந்த மாதிரி சொல்றதால மத்தவங்கள இழி பிறவிகள்னு சொல்ற மாதிரி ஆகாதானு ” கேட்டேன்
அவ்ளோதான்.. இதுல நான் கேட்ட கேள்வியில எழுத்து பிழை வேற இருந்துடுச்சி, அதையும் குத்திகாட்டி பேசினாரு. நான் அந்த பதிவிற்க்கு என் கருத்தை பதிந்ததை நினைக்கும் போது இப்பவும் எனக்கு அருவெறுப்பா இருக்கு..

“என்னங்க இது, நான் உங்ககிட்ட என்ன கேட்டேன் நீங்க ஏன் இப்படி பேசுரீங்கனு கேட்டன்” இதுக்கும் சரியான பதில் இல்லை. என்ன.., ஏற்கனவே சொன்ன பதிலுக்கு இது கொஞ்சம் தேவலாம்னு இருந்துச்சு. அதுக்கு மேல பதில் எழுத எனக்கு புடிக்கல.. அதுக்கு அப்புறம் அந்த பக்கத்துக்கு போறதையே விட்டுடேன்.

அதனாலேயே எந்த பதிவுக்கும் மறுமொழி எழுத ரொம்ப பயமா இருக்கு..



ஏம்பா பிரபல பதிவர்கள் யாரும் மென்மையா பதிலளிக்காத மாதிரியே சொல்றியேனு நீங்க கேக்கலாம். இருக்காங்க, மென்மையா பதில் சொல்றவங்க கொஞ்சம் பேரு இருக்காங்க. ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவர் சாதி பத்தின தன்னோட நிலைபாட்டை ஒரு பதிவா எழுதியிருந்தாரு. அவர போட்டு பிய்யு பிய்யுனு பிச்சி எடுத்துட்டாங்க. ஆனால், அவரு எந்த எதிர் கருத்துக்கும் வன்மமான பதிலை அளிக்கவில்லை. அவரு பேர மறந்துட்டேன். அடுத்து இன்னொருத்தர், இவர் ரொம்ப பிரபலமானவர். செங்கொடி நு பேரு. பொது சேதிகளையும், இசுலாம் பத்தின தனது நிலைப்பாட்டையும், புரிதலையும் எழுதி வருகிறார். இவரது பதிலுரைகளும் மிக நேர்த்தியாக இருக்கும்.

இன்றைய பதிவுலகத்தில் பகிர்தல் என்ற எண்ணத்தில் பதிவுகள் எழுதப்படுவது இல்லை. நான் ஒரு நிலை கொண்டுள்ளேன். என் நிலை சரி என்பவன் என்னுடன் வா. தவறு என்பவன் சரியென உணர்ந்து என்னுடன் வா. இல்லையேல் விலகிப் போ என்பதே இன்றைய பதிவுலக நிலை. யாரும் தான் கொண்டுள்ள நிலை குறித்து பகிர்ந்து, விவாதித்து திருத்திக்கொள்ள மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. பதிவுலகிலும் அடுத்தவருக்கு உபதேசிக்கவே விரும்பிகின்றனறே தவிர உபதேசம் பெற யாரும் இல்லை.

இரண்டாவதாக நான் பார்க்கறது பதிவர் முதியவரா என்று. இவங்கலாம் வாழ்வியல் அனுபவசாலிகள். இவங்ககிட்டலாம் கொஞ்சம் தள்ளி இருக்கறதே நல்லது. வயசான காலத்துல தங்களின் மன அமைதிக்காக பதிவெழுதுபவர்கள் பலர் உண்டு. இவர்கள் பொதுவாக எப்பொழுதுமே சரியாகவே இருப்பார்கள். பொதுவாகவே அடுத்தவர்களை விமர்சிப்பதை தவிர்ப்பவர்கள். எனக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. இவர்கள் மிகவும் பெரியவர்கள், நான் ரொம்ப சின்ன பையன் இவங்க நம்மளையெல்லாம் மதிப்பாங்களானு..!!?. அதே சமயம் நான் எதாவது எடக்கு மடக்கா சொல்லி அவங்கள கடுப்பேற்றிவிடுவேனோனு ஒரு பயம். அதனாலேயே எந்த கருத்தும் இடுவதில்லை. அவர்கள் பதிவு பிடித்திருந்தால் ஒரு விருப்பம்(தமிழ்மணம், தமிழ்10, ...) தெரிவிப்பேன். ரொம்ப புடிச்சிருந்தா முகநூலில் பகிர்ந்துகொள்வேன்.

சரி, அப்ப யாருக்குதான்டா மறுமொழி இடுறதுனு கேக்கறீங்களா..? சொல்றன்.

“மனோபாலா : கொஞ்சம் ஓபனா பேசலாமா பாஸ்கர்,
பாஸ்கர்      : சொல்லுங்கண்ணே..
மனோபாலா   : நாம யார அடிச்சிருக்கோம்
பாஸ்கர்      : எவ்ளோ..
மனோபாலா   : கோயில் குருக்கள், தமிழ் வாத்தியாரு, பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன். இப்படி சாஃப்ட் கேரக்டரா போட்டு அடிச்சி ரவுடியா டெவலப் ஆயிருக்கோம்”


நானும் அதையேதான் சொல்லுறன். நமக்குனு ரெண்டு வகையான புள்ள பூச்சிங்க இருக்குங்க. ஒன்னு புதுசா பதிவு எழுத வந்திருக்கிற புதுவரவு சின்ன பசங்க புள்ள பூச்சி. இந்த வகை புள்ள பூச்சிங்க அதிகமா பயப்படும். ஒரு சில புள்ள பூச்சிங்கதான் திடீர்னு வெவரம் பத்தாம பேசிடும். அதுவும் போக போக திருந்திடும். ஆனால், ஒரு எச்சரிக்கை வளர வளர புள்ள பூச்சி, புள்ள பூச்சியா இருக்காது..!!

இந்த ரெண்டாவது வகை புள்ள பூச்சிதாங்க நமக்கு எல்லா கால நிலைகளிலும் ஏத்தது. இருக்கறதுலேயே ரொம்ப சாதுவான புள்ள பூச்சிங்க இதுங்கதான். புள்ள பூச்சினாலே எந்த தொந்தரவும் கொடுக்காது, கடிக்காதுனு நமக்கு தெரியும். அதுலயும் இதுங்க பரம சாது. பொதுவா புள்ள பூச்சிய அடிக்க கூடாதுனு சொல்லுவாங்க. இந்த புள்ள பூச்சிங்கள பாத்து ஒரு வார்த்தைகூட கடினமா பிரயோகிக்க நமக்கு மனசு வராது. யாருனு கேக்கறீங்களா.. அதாங்க கவிதை எழுதறேன்ற பேருல கண்ணு, காது, மூக்கு, வாயினு எல்லா பாகத்திலேருந்தும் இரத்தம் வர்ற அளவுக்கு எழுதுவாங்களே அவங்கதான். கவிதை எழுதற புள்ள பூச்சிதானேனு அவங்களோட அரசியல் பக்கத்துக்கு போயிடாதீங்க.. அங்கயும் இவங்க அதே மாதிரிதான் இருப்பாங்கனு என்னால உத்திரவாதம் கொடுக்க முடியாது.

குறிப்பு : நான் யார் மனமாவது புண்படும்படி எழுதியிருந்தால் தயவுகூர்ந்து பொருத்தருளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக