ஞாயிறு, 29 ஜனவரி, 2017

1987 - பொதுமக்களும் போராட்டமும் அரசியலும் காவல்துறையும்...




பா.ம.க  கட்சிகளின் கதை - 3 எனும் புத்தகத்திலிருந்து...  ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார்

எனக்கு தேவையில்லை என்று தோன்றிய சில பத்திகளையும் வரிகளையும் நீக்கியிருக்கிறேன்...

படிக்கட்டு 1 : அந்த ஏழு நாட்கள்

நள்ளிரவு மணி பன்னிரண்டைத் தொட்டு ஒரு நிமிடம் கடந்ததும் போராட்டம் தொடங்கலாம் என்று, வன்னியர் சங்க தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அது, தொடர் சாலை மறியல் போராட்டம்.

செப்டம்பர் 17, 1987. இதுதான் வன்னியர் சங்கம் அறிவித்திருந்த தேதி. அன்று தொடங்கி தொடர்ந்து ஏழு நாள்களுக்குச் சாலை மறியல் நடத்துவது என்று இருபது நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தார் ராமதாஸ். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

சொன்னது போலவே போராட்டம் தொடங்கியது. வீட்டில் இருந்து சாலைக்கு வந்த வன்னிய இளைஞர்கள், வழியில் வந்த வாகனங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினர். ஒரே மூச்சில் அனைத்து வடமாவட்டங்களிலும் போராட்டம் தொடங்கியிருந்ததால் அதன் வீரியம் பலமாக இருந்தது. அனைத்து மாவட்டங்களையும் பதற்றம் ஆக்கிரமித்துக்கொண்டது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, போராட்டத்தில் ஈடுபட்ட வன்னிய இளைஞர்களைக் கொத்துக் கொத்தாகக் கைது செய்தது காவல்துறை. நேரம் செல்லச் செல்ல போராட்டத்தின் வீரியம் ஏறுமுகத்திலேயே இருந்தது.


வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சியாக, சாலை ஓரங்களில் நின்றுகொண்டிருந்த ஆகிருதியான மரங்கள் எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன. அவ்வளவு பெரிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் திணறின. ( போலிசார் துப்பாக்கிகளை தூக்கி போராளிகளை சுட ஆரம்பித்ததற்க்கு பிறகே மரங்களை வெட்டி சாலையில் கிடத்தி போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்தனர்.)

தேசிய நெடுஞ்சாலைகள் செயலற்றுப் போயின. இதனால் காவல்துறை, கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தது. சாலையில் இறங்கிப் போராடியவர்களின் உடல்கள் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. குண்டடிப்பட்டவர்கள் எல்லாம் சாலையிலேயே சுருண்டு விழுந்தனர். முதல் நாள் மட்டும் நாங்கு பேர் இரையாகியிருந்தனர். ( போராட்டம் தொடங்கிய முதல் நாளே, போலிசார் துப்பாக்கி தூக்கி சுட்டார்கள் எனும் போது, ஆட்சியாளர்கள் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்க்கு பதிலாக வன்னிய மக்களை சுட்டுக் கொல்வதற்க்குதான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. மக்கள் திலகத்திற்க்கு வன்னிய மக்களெல்லாம் மக்களாகவே திரிந்திருக்கவில்லை போல. ஒருவேளை தேர்தலில் வடமாவட்டங்களில் தி.மு.க-வின் வாக்கு வங்கியை வீழ்த்த முடியாமல் போனதற்க்கு வன்னிய மக்கள்தான் காரணம் என்ற எண்ணமாகக்கூட இருந்திருக்கலாம்.)

அடுத்தடுத்த நாள்களுக்கும் போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஐ.ஜியாக இருந்தவர் ஸ்ரீபால் ஐ.பி.எஸ். கலவரத்தீ அடுத்தடுத்த மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வன்முறை. ரகளை. கலவரம். தடியடி. கலவரத்தை அடக்க மீண்டும் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கியது காவல்துறை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குண்டடி பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.  ( ஆக, மக்கள் போராட்டத்தை ஒடுக்க இன்றுவரை ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவதையே கொள்கையாக கொண்டுள்ளது தமிழக காவல்துறையும் அ.தி.மு.க அரசும்.)

பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், ஒரத்தூர் ஜெகநாதன் உள்ளிட்ட ஒன்பது உயிர்கள் பலியாகின. ' உண்மையில் பன்னிரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையினரால் தாக்கப்பட்டு மேலும் ஒன்பது பேர் உயிரிழந்தனர்' என்றது வன்னியர் சங்கம். ( பொய் கணக்கு எழுத நம்ம காவல்துறைக்கு சொல்லியா கொடுக்கணும்! இவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சியுள்ள இந்த காலத்திலேயே காவல்துறை கன்னாபின்னானு நடந்துக்கிறாங்க, எந்த தொழில்நுட்ப வசதியுமில்லாத அந்த காலத்தில் அந்த சாதாரண குடியானவர்களுக்கு எதிராக எவ்வளவு அராஜகங்கள் அரங்கேறியிருக்கும். படிக்கும்போதே நெஞ்சமெல்லாம் பதறுது.)

தோட்டாக்களுக்கு பலியானவர்களில் ஒருவரான சித்தணி ஏழுமலை, இருபது வயது இளைஞர். கயத்தூர் முனியனுக்குத் திருமணமாகி வெறும் பத்து மாதங்களே ஆகியிருந்தன. போலீசாரால் தடியடிக்கும் குண்டடிக்கும் இலக்காகிக் கீழே சரிந்த இளைஞர்கள் வெகுநேரம் கழித்தே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சம்பவ இடங்களிலும் மருத்துவமனிகளிலும் பலர் உயிரிழந்தனர். ( ஆக, நான் ஏற்கனவே சொன்னது போல, இவர்களுக்கு வன்னியர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்திருக்கிறதேயொழிய போராட்டத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இருந்திருக்கவில்லை.)


'போதாக்குறைக்கு, வன்னியர்களின் வீடுகளுக்குள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் புகுந்து தாக்குதல் நடத்திய காவலர்கள், பெண்களை அவமானப்படுத்தியதோடு, வீட்டில் இருந்தவர்களை அடித்து உதைத்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியுள்ளனர்' என்றும் குற்றம் சாட்டியது வன்னியர் சங்கம். ( இன்று மெரினா அமைதி போராட்டத்தில் கலவரக்காரர்கள் புகுந்துவிட்டார்கள் என்று போராட்டத்தை கலவரக்காடாக்கி தேடுதல் வேட்டை எனும் பெயரில் நடந்தேரிய அராஜகங்களை இன்றைய தொழில்நுட்ப சாட்சியங்களாக கண்டிருப்பீர்கள்.. கோவத்தில் கொந்தளித்து பொருமியிருப்பீர்கள்... அன்றைய அராஜகங்களுக்கு ஏது சாட்சி...!!! எல்லாம் வல்ல அவன் மட்டுமே சாட்சி... அதர்மங்களுக்கும், அநீதிகளுக்கும் துணைபோனவர்களுக்கு நல்ல சாவு என்பதே கிடையாது. அதற்கான கண்கூடான சாட்சிகளாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மரணங்களையே கூறலாம் என்று கருதுகிறேன்!)

மொத்தம் ஏழு நாட்கள். நித்திய காண்டம் பூரண ஆயுசாக அந்த சாலை மறியல் போராட்டம் உக்கிரமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்ததோடு, வன்னியர் சங்கம் என்ற இயக்கத்தை தேசிய அளவில் அறிமுகம் செய்தது இந்தப் போராட்டம்.

எதற்காக இந்த போராட்டம்? இத்தனை உயிர்ப்பலிகளும் ஏன்?

அடுத்த பதிவில் ...

குறிப்பு: பதிவில் நீல நிற எழுத்துக்களில் உள்ளவை என் கருத்துக்கள்.

நன்றி: பா.ம.க கட்சிகளின் கதை வரிசை - 3 , "miniMAX", ஆர்.முத்துக்குமார்
நன்றி: இணையம் (படங்கள்)

சனி, 18 ஜூன், 2016

கனவை விதைப்பவன் எனும் கவிதை நூல்


நூலின் பெயர்     : கனவை விதைப்பவன்
ஆசிரியர்          : கணேஷன் குரு
வகை             : கவிதை (பொது)
விலை            : ரூ.285 /-
நூலின் அட்டை    : 


இது இந்நூலுக்கான விமர்சனம் அல்ல. தொடக்கத்தில்(1 ஆண்டிற்கு முன்) விமர்சனம் எழுத வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால், ஒரு கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்பதை நூலினை வாசிக்க வாசிக்க உணர்ந்துகொண்டேன்.

சாதாரன உரைநடையைப் போன்று கவிதைகளை வாசிக்கவியலாது. ஒரு கவிதையின் ஆழத்தை இனிமையை அதன் சாரத்தை முழுமையாக உணர அக்கவிதையோடு அக்கவிதை எழுதப்பட்ட சூழலோடு இரண்டற கலந்தால் மட்டுமே முடியும். பொதுவாக ஒவ்வொரு கவிதையும் அதன் முடிவில் நம்மை அத்தகைய சூழலுக்கு இட்டு சென்றுவிடும்.

மனம் ஒன்றி இலயித்து ஒரு மகிழ்ச்சி ததும்பும் கவிதையை வாசிக்கும் போது நம் மனமும் அதனூடே பயணித்து நம்மையும் அம்மகிழ்ச்சி கடலில் மூழ்கச் செய்யும் அவ்வானந்தத்தை சொற்களால் சொல்லிவிட முடியாது.

அதேபோல், புதுக்கவிதைகளில் “ஹைக்கூ” எனும் ஜப்பானிய கவிதை வடிவம், ஒரு எளிய வாக்கியத்தை மிக அழகாக பொருளுள்ளதாக தருவது.

ஏன்
இந்தப் பறவைகளை
சுட்டு
வீழ்த்துகிறார்கள்
கட்டற்ற
சுதந்திரத்தின் குறியீடாய்
எதுவும்
இருக்கக்கூடாது
என்றா?

ஒவ்வொரு புதுக்கவிதையும் எண்ணற்ற சங்கதிகளை உட்பொதிந்து வருகின்றன. அத்தகைய கவிதைகளின் உள்அர்த்தங்களை அறியும் போது கவிதையின் வலிமையையும் சேர்ந்தே உணரலாம். மேலயுள்ள கவிதையை படித்தவுடன் மனதில் சுதந்திரம் குறித்த பல்வேறு எண்ணங்கள் மனதில் எழும், அதே நேரம் சுட்டு வீழ்த்தும் மனிதனின் மீது ஒரு கோவமும், வீழ்த்தப்படும் பறவையின் மீது இரு இறக்கமும் தோன்றும். இப்படியாகத்தான் கவிதைகள் தாக்கத்தை தருகின்றன.

கவிதைகளில் மிக முக்கியமானது மறைவாய் சொல்லப்படும் சேதிகள்தான். மறைத்து சொல்வதால்தான் கவிதைகள் அழகு பெறுகின்றன. உண்மையில் கவிதைகள் நம் கற்பனைகளை விசாலமாக்குகின்றன. கீழுள்ள இக்கவிதையை பாருங்கள் :
“எனக்கு
நானே
எதிரி

நீ
வழிப்போக்கன்”

மிக எளிமையான ஒரு ஒற்றை வரியில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது பாருங்கள். இதற்காக இக்கவிதை ஆசிரியரை எவ்வளவு போற்றினாலும் தகும். நிச்சயமாக இக்கவிதை அத்தனை மனிதருக்கும் 100 விழுக்காடு முழுமையாக பொருந்திப்போகிறது. “என் செயலகளே, எனக்கான நன்மை தீமைகளை முடிவு செய்கின்றன.”
இதோ பின்வரும் இக்கவிதையை காணுங்கள் :
“நீங்களெல்லாம்
உயர்ந்து விட்டதால்
மௌனம் போர்த்தி
பவிசாய்த் திரிகிறீர்கள்.

இப்போதுதான் விழித்துக்கொண்ட நான்
மௌனித்திருக்க முடியாது
கத்திக் கொண்டிருக்கிறேன்”
இக்கவிதையை ஒவ்வொருவரும் தன் வாழ்வில் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என்றே கருதுகிறேன். நானும் சில பல சமயங்களில் கத்திக்க்கொண்டேயிருக்கிறேன்.

“திருமலர்” எனும் தலைப்பிட்ட ஒரு கவிதையில் உண்மை எங்கே எப்படியிருக்கிறது என கவிஞர் வெகு அழகாக வடித்திருக்கிறார். கவிதை இப்படிதான் தொடங்கும் :
“ஒரு பொய்க்கு முன்னால்
உண்மை மௌனமாக இருக்கிறது
... ... ...”
இந்த கவிதையை படித்தவுடன் எனக்கு தோன்றியது, “உண்மையை கொன்றுவிட்டு நாம் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம்”

அடுத்து “வனம்” எனும் கவிதையில் நாகரிகம் எனும் பெயரில் நாம் எவ்வளவு கொடூரமாக மாறிவிட்டிருக்கிறோம் என்பதை மிக ஆழமாக தெளிவாக உணர்த்தியிருக்கிறார். அக்கவிதையின் தொடக்க மற்றும் முடிவு வரிகள் :

“அவனை வனத்தில் கண்டுபிடித்தார்கள்
மனிதர்களைக்கண்டு
பயந்து
புலிகளுக்குப்பின் பதுங்கியவனை,
தோட்டாக்களை உபயோகித்து
விரட்டிப்
பிடித்தார்கள்.
...
...
...
...
நகரம் தப்பி
பிறந்த வனம் தேடி ஓடினான்.
வனம் காணவேயில்லை.
எங்கும்
‘விற்பனைக்கு இடம்’ என
வார்த்தைகள்
முளைத்துக் கிடந்தன.”

அடுத்து கடவுளை பலர் எங்கெங்கோ தேடியிருப்பர், நிம்மதி தேடி அலைந்திருப்பர். அவர்களுக்கெல்லாம் கடவுளின் தரிசனம் கிடைத்திருக்குமா என்றால் அதற்கு இல்லை/முடியாது என்பதாகதான் பதில் இருக்கும். ஆனால், இந்த கவிஞர் கடவுளை கண்டுவிட்டிருக்கிறார். கடவுளிடம் பேசியிருக்கிறார். அவ்வப்போது காணவும் செய்கிறார். இந்த கவிதையை படித்த பின் நீங்களும் கடவுளை காணும் பாக்கியம் வாய்க்கலாம்.! “இளைஞர்களின் கடவுள்” எனும் தலைப்பில் அக்கவிதை இடம்பெற்றிருக்கும்.

இதோ அடுத்து கவிதை “சாயல்” எனும் தலைப்பில், ஒவ்வொருவருக்குமான சாயல் இப்படிதான் இருக்கிறது. ஆனாலும் சிலரிடம் போலி வேடமும் தென்படும். சரி கவிதையை காணலாம்.

“எனக்கென்று குடும்பம்
எனக்கென்று உறவு
எனக்கென்று குலதெய்வம்
எனக்கென்று சாதி
எனக்கென்று மதம்
எனக்கென்று மொழி
எனக்கென்று நாடு
எனாக்கென்று நாகரீகம்
எனக்கென்று வரலாறு

இதில் எதுவும் என் தேர்வல்ல
என்றாலும் இருக்கட்டும் சாயல்”.

அடுத்ததாக “காதல்” எனும் தலைப்பிட்டு எழுதியிருக்கிறார் பாருங்க ஒரு கவிதை.!! ஒரு சின்ன சேதி, அதை எவ்வளவு அழகாக சொல்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது கவிதை. இந்த கவிதையில் கவிஞரின் இரசனையை நிரம்ப இரசிக்கிறேன்.

“பனிரெண்டாவது
தளத்தின்
கண்ணாடித்
தடுப்புகளைத்
தாண்டி
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.

எல்லாம்
அழகாய்
தெரிகிறது
எல்லாம்
ஒழுங்காய்
நகர்கிறது.

தூரத்திற்குள்
இப்படி
ஒரு
அற்புதத்தை
கணித்
திருக்கவில்லை.”

இங்கு “எத்தனை காலம்தான்” எனும் தலைப்பிட்ட கவிதையின் கடைசி சில வரிகளை மட்டும் தருகிறேன்.
“...
...
...
நாட்கள் கடந்தன –
நல்ல கல்வி இல்லை
நல்ல மருத்துவம் இல்லை
நல்ல சாலை இல்லை
நல்ல உணவு இல்லை
நல்ல வேலை இல்லை
நல்ல பாதுகாப்பு இல்லை
நல்ல வாழ்க்கை இல்லை
நல்ல என்று எதுவுமே இல்லை
ஆனால், எனக்கொரு அரசாங்கம் இருக்கிறது.”

இறுதியாக “மொழி” எனும் தலைப்பிட்ட கவிதை. முழுமையாகவே தருகிறேன். என்னை மிகவும் ஆட்கொண்ட, பிடித்துவிட்ட கவிதைகளில் ஒன்றென கூறலாம். கவிதை இதோ:     

“என் தேசத்தின் மொழி, என்னுடையதல்ல
என் தேசிய கீதத்தின் மொழி, என்னுடையதல்ல

என் நாட்டின் கொடி, என்னுடையதல்ல
என் கொடியின் அடையாளம், என்னுடையதல்ல

என் நாட்டின் முதன்மை மந்திரிகள் பலரும், என் மொழியல்ல
என் நாட்டின் முதற்குடிமகன், என் மொழியல்ல

ஆயிரம் ‘இல்லைகள்’, என்னை ஆள்கின்றன
இலவசமாய் தொல்லைகள் தருகின்றன

ஆரியம், திராவிடம், தலித்தியம்...
என்று நூறு கதைகள் சுழல்கின்றன-
தமிழை குழி தோண்டி புதைக்கின்றன

முப்பாட்டன் பெருமை பேசி,
சாதிய பட்டம் சுமந்து,
சோழனின் எல்லை வியந்து,
கனவுக்குள் வாழ்கிறேன், இது என்னுடைய
வாழ்க்கையல்ல.
என் மொழியின் கீதமும்,
என் அடையாளத்தின் கொடியும்,
எனக்கான நாடும்,
என் இனத்தின் தலைமையும்,
எழுகவே என்று
என்னுயிரே முழங்கு.”

இப்படியாக பல கவிதைகளை கொண்டுள்ளது இப்புத்தகம். மேலும் பல கவிதைகளை சுட்டிக்காட்டவே விரும்புகிறேன். ஆயினும், பதிவின் அளவு மேன்மேலும் பெரிதாகிவிடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


நூல் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய இடம் :
Notion Press
5 Muthu Kalathy Street, Triplicane,
Chennai – 600 005.

இணையத்தில் பெற பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.
Flipkart.com, Amazon.in, amazon.com, paytm உள்ளிட்ட தளங்களின் மூலமாக பெற மேற்கூறிய இணைப்பில் இணைப்பு உள்ளது.

ஆசிரியரின் முகநூல் : https://www.facebook.com/ganeshan.guru?fref=nf